Friday, April 30, 2004

ஒரு குட்டிக் கதை



சமீபமாக எனக்கு வந்த சில மின்னஞ்சல்களிலிருந்து ஒன்றை மட்டும் இங்கு தருகின்றேன்.

நண்பர் ஒருவர் ஒரு ஓட்டலுக்குச் சென்று தங்குவதற்காக ஒரு ரூம் புக் செய்கிறார். ரூம் பாய் சகிதமாக அறைக்குள் நுழைந்தவருக்கு ஒரே ஆச்சரியம். அவருடைய அறையில் ஒரு கம்ப்யூட்டர் வைக்கப்பட்டிருக்கிறது. பிரபலமான அந்த ஓட்டலைப் பற்றி தன்னுடைய நாட்டிலிருந்து போய் வந்தவர்கள் சொல்ல அவர் கேள்விப்பட்டிருக்கிறார். பெரிய வசதிகளெல்லாம் கொண்ட ஓட்டல் அது. கம்ப்யூட்டரைக் கண்டதும் அவருக்கு ஊரிலிருக்கும் தன் மனைவிக்கு மெயில் அனுப்பலாம் என்று தோன்றுகிறது.

ஆச்சரியத்தில் மூழ்கிப் போனவராக கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்தபடி அவருடைய மனைவிக்கு ஒரு மெயில் அனுப்புகிறார். சந்தோஷம் தாங்கவில்லை அவருக்கு. சந்தோஷத்தில் அவர் செய்த ஒரே ஒரு தவறு அவருடைய மனைவியின் மெயில் ஐடியை டைப் செய்யும்போது ஒரே ஒரு எழுத்துப்பிழை நேர்ந்ததை கவனிக்காததுதான்.

எழுத்துப்பிழையால் மாறிப்போன அந்த மெயில் வேறு ஒரு பெண்ணிடம் வந்து சேர்கிறது. மெயிலை ரிசீவ் செய்த பெண் அப்போதுதான் தன் கணவனின் சடலத்தைத் தகனம் செய்துவிட்டு வந்திருந்தாள். உறவினர்களிடமிருந்து தகவல்கள் எதிர்பார்த்து மெயில் பார்ப்பதற்காக உட்கார்ந்தவளுக்கு முதலில் கண்ணில்படுகிறது அந்த மெயில்.

அந்த மடல் இப்படியாக ஆரம்பித்தது,

To: My Loving Wife

Subject: I've Reached

Date: ......

என்னிடமிருந்து வரும் இந்த மடலைக் கண்டு நீ ஆச்சரியப்படுவாய் என்று எனக்குத் தெரியும். இங்கு கம்ப்யூட்டரெல்லாம் வைத்திருக்கிறார்கள். நமக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் மெயில் அனுப்பும் வசதி கூட இருக்கிறது. நான் இங்கு வந்து சேர்ந்ததும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டேன். நாளை உன்னுடைய வரவுக்காக இங்கு எல்லாம் தயாராக இருக்கிறது. உன்னுடைய வருகையை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். உன்னுடைய பயணம் சுகமாக அமைய வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
உன் அன்பான கணவன்

No comments: