Monday, May 03, 2004

உங்களுக்குள்ளே சில புதிர்கள் - 5 (நுண்ணறிவு)



வாங்க, உங்க ஐக்யூ எவ்வளவுன்னு பாத்துட்டீங்களா? அதுக்கான விளக்கத்தைத் தெரிஞ்சுகிட்டீங்களா? இப்ப உங்களைப் பத்தி நீங்களே தெரிஞ்சுகிட்டிருப்பீங்க.

இந்த நுண்ணறிவுத் திறன் ஒவ்வொரு தனியாளுக்கும் மாறுபடும். நுண்ணறிவைத் தெரிந்து கொள்ள பலவிதமான சோதனைகள் இருக்கின்றன. இந்தச் சோதனைகள் பெரும்பாலும் வயதின் அடிப்படையிலேயே நடத்தப்படுகின்றன.

பெரும்பாலானவர்களின் நுண்ணறிவு சராசரி நிலையிலும் (90 - 110), சராசரியைவிட சற்று உயர்வானநிலையிலும் (111 - 120) இருக்கிறது. மிகவும் உயர்வான நிலையில் (120 - 130) நுண்ணறிவை உடையவர்கள் மிகவும் குறைவு.

நுண்ணறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள சில வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொள்ள நமது உளவியலாளர்கள் குறிப்பிடும் சில நுண்ணறிவு சார்ந்த விஷயங்களைப் பார்க்க வேண்டும்.

இந்த நுண்ணறிவு விஷயத்தை ஸ்பியர்மேன் என்பவர் இரண்டு வகையாகப் பிரிக்கிறார். (மற்ற உளவியலாளர்கள் இன்னும் பல வகைகளாகப் பிரிக்கின்றனர்)

1. பொதுவான திறன்
2. சிறப்புத் திறன்


அவர் சொன்னதைக் கொஞ்சம் எளிமையா சொல்லமுடியும்.

முதலில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் எல்லோரிடமும் பெரும்பாலும் காணப்படும் பொதுவான திறன்கள். இது ஒரு பெரிய லிஸ்ட். இதனைக் கொண்டுதான் நம்ம உளவியலாளர்கள் நுண்ணறிவுச் சோதனை நடத்துகின்றனர்.

பொதுவான திறன்கள் ஒவ்வொரு தனிநபரிடமும் மாறுபடுகிறது. எந்த அளவுக்கு இந்த பொதுத்திறன்கள் ஒருவரிடம் அமைந்துள்ளனவோ அதைப் பொறுத்தே அந்த நபர் வாழ்க்கையில் வெற்றிபெறமுடியும்.

இரண்டாவதாகச் சொல்லப்பட்டிருக்கும் சிறப்புத் திறன் என்பது ஒரு குறிப்பிட்ட செயல்களில் மட்டும் அல்லது சூழ்நிலையில் மட்டும் செயல்படுத்தப்படுவது. இந்த சிறப்புத் திறன் என்பது ஒருவரால் தன்னுடைய வாழ்நாளில் கற்றுக் கொள்ளப்படுவது.

சரி, இது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதே? அதுதான் முக்கியமான விஷயம்.

இந்த பொதுவான திறன்களை ஒரு குறிப்பிட்ட செயலுக்காக நீங்கள் செய்யும்போது அது சிறப்புத் திறனாக மாறுகிறது. அவ்வளவுதான். ஒரு குறிப்பிட்ட செயலில் அல்லது குறிப்பிட்ட சூழ்நிலையில் பொதுவான திறன்களைச் செலுத்தும்போது அது சிறப்புத் திறனாக மாறுகிறது.

நுண்ணறிவுக்கு பொதுவான திறன்கள்தான் அடிப்படை. இந்த நுண்ணறிவு, இளைய பருவத்தில் இருக்கும் ஒருவரின் ஊக்கத்தினைப் பொறுத்து மாறுபடும். இலக்கினை அடையும் ஊக்கத்தைப் பொறுத்து நுண்ணறிவில் மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படுகின்றன.

இந்த பொதுவான திறன்கள் மட்டுமே ஒருவருடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி கொண்டது.

சரி, இந்த பொதுவான திறன்கள் பற்றி நிறையவே சொல்லியாகிவிட்டது. பொதுவான திறன் அப்படின்னா என்ன? இதோ உங்களுக்காக அந்தப் பட்டியல்.

1. சிந்திக்கிற திறன் 2. பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறன் 3. பகுத்தறிந்து புரிந்து கொள்ளும் திறன் 4. காரண காரியங்களை ஆராயும் திறன் 5. மிக விரைவாக கற்றுக் கொள்ளும் திறன் 6. கற்றதை நினைவில் வைத்திருக்கும் திறன் மற்றும் நினைவு கூறும் திறன் 7. தக அமைத்துக் கொள்ளும் திறன் 8. அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளும் திறன். 9. தனக்குக் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலையும், குறிப்புகளையும் புரிந்து கொண்டு செயல்படும் திறன். 10. செய்திகளையும் விஷயங்களையும் அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தும் திறன்

சரி, இதெல்லாம் நுண்ணறிவுச் சோதனைகளில் இருக்கக்கூடிய பொதுவான உளத்திறன்கள். இதெல்லாம் எல்லோரிடமும் இருக்கக்கூடியது. ஆனால், நுண்ணறிவை எப்படி வளர்த்துக் கொள்வது?

அதற்கும் சில விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமான சில திறன்களைக் கொண்டே இந்த நுண்ணறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளலாம். அதில் முக்கியமான சில:

1. கவனம்
2. ஊக்கம்

இவற்றைப் பற்றி அடுத்து வரும் வாரங்களில் பார்க்கலாம்.

உங்கள் செயல்திறனுக்கு இந்த வாரம் ஒரு விஷயம்: ரொம்ப சிம்பிள்

அலாரம் அடித்ததும் பதறியடித்து எழுந்திருப்பீர்கள் இல்லையா? சரி, அலாரத்தை நிறுத்திவிட்டு உடனே எழுந்துவிடாதீர்கள். படுக்கையிலிருந்து எப்போது எழுந்தாலும் வேகமாக எழுந்திருக்காதீர்கள். கண் விழித்தவுடன் வேகமாக எழுந்திருக்காதீர்கள். அலாரத்தை நிறுத்திவிட்டு மெதுவாக எழுந்து படுக்கையிலேயே உட்காந்து கொள்ளுங்கள். கண்களை மட்டும் மூடிவிடாதீர்கள். மறுபடியும் தூங்கிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.

படுக்கையில் உட்கார்ந்தபடியே அன்று முழுவதும் செய்ய வேண்டிய வேலைகளை ஒவ்வொன்றாக மனதில் கொண்டு வாருங்கள். காலையிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரையிலான வேலைகளை ஒவ்வொன்றாக யோசித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வேலைக்கும் ஒன்று, இரண்டு என்று கணக்கு வைத்துக் கொள்ளூங்கள். முதலில் செய்ய வேண்டிய வேலை, அடுத்ததாக செய்ய வேண்டிய வேலை என்று வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். பெரும்பாலும் அன்றைய நாளில் அதே வரிசையில் வேலைகளைச் செய்யுங்கள்.

உங்களை மட்டுமே முன்னிறுத்திச் செயல்பட வேண்டிய வேலைகளை மட்டுமே இப்படி மனதில் வரிசைப்படுத்துங்கள். அடுத்தவரை நம்பி செய்ய வேண்டிய வேலைகளை நீங்கள் வரிசைப்படுத்த வேண்டாம். அது உங்களுடைய அடுத்த வேலைகளை பாதிக்கும்.

அடுத்தவரை நம்பி செய்யவேண்டிய வேலையாக இருப்பின் அதற்கு ஒரு நேரம் குறித்துக் கொள்ளுங்கள். இன்று மதியம் மூன்று மணிக்குள் நண்பரிடமிருந்து இந்த வேலையைச் செய்து வாங்கிவிட வேண்டும். அப்படி வாங்க முடியாமல் போகும்படியானால் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதையும் முன்கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள்.

பத்து நிமிடத்திற்குள் இப்படி வரிசைப்படுத்திவிட்டு அன்றைய வேலைகளைத் தொடங்குங்கள். ஒவ்வொரு நாளும் இப்படி திட்டமிட்டு ஆரம்பிப்பதால் நாளடைவில் திட்டமிடுவதும், திட்டமிட்டதை செயல்படுத்துவதும் உங்கள் செயல்திறனை அதிகப்படுத்தும். நாளடைவில் உங்களுக்கு அலாரமே தேவையிருக்காது.

ஆனால், இந்த தகவல் அலாரத்தை அழுத்திவிட்டு மறுபடியும் தூங்கச் செல்பவர்களுக்காக அல்ல.

No comments: