Saturday, April 10, 2004

உங்களுக்குள்ளே சில புதிர்கள் - 3 (கற்றல்)



கற்றுக் கொள்வது என்று சொன்னதும் உங்களுக்கு ஞாபகம் வந்த விஷயம் எது?

(பாருங்க, இந்த ஞாபகம் திரும்பத் திரும்ப வந்துவிடுகிறது. பட்டியல் போடாதவர்களுக்காக இன்னொரு விஷயம் இந்தக் கட்டுரையின் கடைசியில் இருக்கிறது.)

1. ஒண்ணாங்கிளாஸில் கூட்டல், கழித்தல் சொல்லிக் கொடுத்த செண்பகம் டீச்சரிடம் கற்றுக் கொண்டது.

2. பத்தாவது படிக்கும்போது வீட்டுக்கு வந்து இங்கிலிஷ் சொல்லிக் கொடுத்த ரம்யாவிடம் future-tense கற்றுக் கொண்டது.

3. வாக்கிங் வந்த புர·பொஸர் மித்ராவை காலேஜ் வாசலில் வழிமறித்து, டெலிபதி விஷயங்களைக் கற்றுக் கொண்டது.

சரி, இது மட்டும்தானா கற்றுக் கொண்டது? இங்கே கீழே கொடுத்திருக்கும் சில விஷயங்களையும் பாருங்கள்.

1. முதல் முதலாக நீங்கள் டைம் பார்க்க கற்றுக் கொண்டது.
2. இரண்டு பக்கமும் வண்டி வருகிறதா என்று பார்த்துவிட்டு ரோட்டைக் கிராஸ் செய்யக் கற்றுக் கொண்டது.
3. சட்டையை அழகாக, இறுக்கமாக டக்-இன் செய்து கழுத்தைச் சுற்றி டை அணியக் கற்றுக் கொண்டது.

இப்படி நீங்கள் கற்றுக் கொண்டது நிறையவே இருக்கும். இதெல்லாம் கூட கற்றல்தான். என்ன இதையெல்லாம் நீங்கள் உங்கள் வழக்கமாக்கிக் கொண்டீர்கள். ஆனால், கற்றலை சில பிரிவுகளாகப் பிரித்து வைத்துவிட்டார்கள் உளவியல் ஆய்வாளர்கள்.

சரி, அது என்னங்க கற்றல்? அப்படின்னு கேட்டீங்கன்னா அதுதான் கற்றலுக்கு ஆரம்பம். ஆமாங்க, கேட்டுத் தெரிந்து கொள்கிறீர்களே அதுதான் கற்றல். புதிது, புதிதாக நாம் பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதே கற்றல். இந்தக் கற்றல் இருக்கிறதே, இதற்கு வயசு வித்தியாசமெல்லாம் கிடையாது. பிறந்ததிலிருந்து கடைசி வரைக்கும் இந்தக் கற்றல் நமக்குள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். நாம் எல்லோருமே ஏதாவது பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டுதானிருக்கிறோம்.

முதலில், இந்தக் கற்றலைப் பற்றி ஆய்வாளர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

1. கற்றல் என்பது மனிதர்களின் நடத்தையில் ஏற்படக்கூடிய நிலையான மாற்றத்தைக் குறிக்கிறது.

2. கற்றல் என்பது தொடர்புகளின் அடிப்படையில் எழும் ஒரு செயல். நீங்கள் பிறக்கும்போது உங்களிடம் இல்லாத விஷயங்களை, வளர்ச்சியின்போது பெறப்படுகின்ற செயல்கள் அனைத்தும் கற்றலின் அடிப்படையிலேயே அமைகிறது.

ரொம்ப குழப்பமா இருக்கா? அது ஒண்ணுமில்லைங்க. ரொம்ப சாதாரண விஷயம்.

தூண்டப்படும் உணர்வினால் உங்களுக்குள் ஏற்படும் மாறுதலே கற்றல் எனப்படுகிறது.

சரி, அதெல்லாம் இருக்கட்டும். கற்றல் என்பது உங்களுக்குள் எப்பொழுது நிகழ்கிறது? உங்களுக்குள் ஏற்படும் ஒரு தூண்டலின் மூலமாக உங்களிடம் ஏற்பட்ட மாறுதலை நீங்கள் புரிந்துகொண்ட வகையில் (கற்றுக் கொண்ட வகையில்) அந்தத் தூண்டலுக்கு மறுவினை தருகிறீர்கள்.

ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். ஒரு சின்ன உதாரணம்: நெட்வொர்க் வழியாக பிரிண்ட்டரில் நீங்கள் நாலு விதமான பிரிண்ட் கொடுக்கிறீர்கள். அதே நேரத்தில் உங்கள் எம்.டி ஒரே ஒரு பக்கம் பிரிண்ட் கொடுத்திருக்கிறார். நீங்கள் கொடுத்த பிரிண்ட்டில் முதல் பிரிண்ட் போய்க் கொண்டிருக்கிறது. அடுத்த மூன்று பிரிண்டுகளுக்குப் பிறகு எம்.டியுடையது கடைசியாக இருக்கிறது. நீங்கள் கொடுத்திருக்கும் அந்த மூன்று பிரிண்ட்டுகளும் முடிய கால் மணி நேரம் ஆகும்.

அதுவரை அவர் காத்துக் கொண்டிருப்பதில் நியாயமில்லை. அவரே வந்து "ஒரு பக்கம்தான் மிஸ்டர்.______" என்று சொல்கிறார்.

உடனே என்ன செய்கிறீர்கள்? நீங்கள் கொடுத்த பிரிண்ட்டுகளை நிறுத்திவைத்து (pause printing), எம்.டி கொடுத்திருந்த பிரிண்ட்டை முதலில் அனுமதிக்கிறீர்கள். அவரும் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டு "நன்றி மிஸ்டர்._______" என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.

ஆக, எம்.டியிடமிருந்த வந்த வார்த்தைகள் தூண்டல். உடனே உங்களுடைய பிரிண்ட் ஜாபை நிறுத்திவிட்டு, அவருடைய பிரிண்ட்டை எடுத்துக் கொடுத்தீர்கள் பாருங்கள், இது அவருடைய தூண்டலுக்கு நீங்கள் ஏற்படுத்திய துலங்கல். இந்த இரு வினைகளுக்கிடையே ஒரு மாற்றம் நிகழ்ந்தது பாருங்கள், அதுதான் கற்றல். இந்தக் கற்றலின் அடிப்படையில், அடுத்த முறை நீங்கள் பிரிண்ட் கொடுக்கும்போது பிரிண்ட் க்யூவைப் பார்த்துவிட்டுக் கொடுப்பீர்கள். அல்லது அடுத்த முறை உங்கள் எம்.டி பிரிண்ட் கொடுத்தால் நீங்களாகவே உங்களின் பிரிண்ட் ஜாபை நிறுத்திவிட்டு அவருடையதை முதலில் அனுமதிப்பீர்கள்.

இது போல தினமும் ஏதாவது ஒரு விஷயத்தை நாம் கற்றுக் கொண்டுதானிருக்கிறோம்.

ஆனால், இந்தத் தூண்டல் மட்டுமே கற்றுக் கொடுக்கிறதா என்றால் இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். சில எளிய நடத்தைகள் மட்டுமே இந்த முறையில் அமையும். ஆனால், சிக்கலான கற்றல்கள் (Complex Learning) இந்தத் தூண்டல், துலங்கல் அடிப்படையில் அமைவதில்லை. இந்த சிக்கலான கற்றலுக்கு சில அடிப்படையான திறன்கள் தேவை. முக்கியமாக நுண்ணறிவு. அதாவது சமயோசித புத்தி.

சிக்கலான கற்றல் என்பதே சூழ்நிலையைப் பொறுத்து சரியாக முடிவு செய்வதுதான். சிக்கலான சூழலில் என்னவிதமான முடிவு எடுக்க வேண்டும்? எப்படிச் செயல்பட வேண்டும்? என்பதே சிக்கலான கற்றல். இதனை அனுபவத்தின் மூலமாக மட்டுமே பெற முடியும்.

சரி, மீண்டும் அதே பிரிண்ட் விஷயத்துக்கு வருவோம். பேங்கில் ஒரு ஸ்டாப் பேமெண்ட் லெட்டர் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் உங்கள் எம்.டி அவருடைய லேப்டாப்பிலிருக்கும் அட்ரஸ் லிஸ்ட்டை லேபிள்களாக மாற்றி பிரிண்ட் எடுத்துக் கொடுக்கச் சொல்கிறார். நீங்கள் எதைச் செய்வீர்கள். பேங்க் விஷயத்தைத்தான் பார்க்க வேண்டும், அதுவே முதலில். எம்.டியின் விஷயத்தை பேங்க் போய்விட்டு வந்து எடுத்துக் கொடுக்கலாம். அதற்கான கால அவகாசம் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், பேங்கில் அந்த லெட்டரைக் கொடுக்கவில்லையெனில் நீங்கள் நிறுத்த வேண்டிய 12 லட்சம் பேமெண்ட் கிளியராகிவிடும். உங்கள் கம்பெனியிலிருந்து பணம் போய்விடும். அதனால் உங்கள் வேலையும் போய்விடக்கூடிய நிலை ஏற்படும்.

சமயத்துக்குத் தகுந்தாற் போல் யோசித்துச் செயல்படுவதே சமயோசித புத்தி. அந்த நேரத்தில் நீங்கள் பேங்க் போய்விட்டு வந்து எம்.டி கொடுத்த வேலைகளைச் செய்வதே சமயோசிதமான முடிவாகும்.

ஆனால், சிக்கலான கற்றலுக்கு இது மட்டுமே விளக்கமாகிவிடாது. இன்னும் நிறையவே இருக்கிறது. சில சிக்கலான விஷயங்களை எளிமையாக அணுகுவதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தமிழோவியத்துக்குப் போவதுதான். அங்கேதான் அந்த எளிமையான விஷயத்தைச் சொல்லியிருக்கிறேன்.

சரி, மறக்காமல் விஷயத்துக்கு வருகிறேன்.

நினைவுத்திறனுக்காகப் போடச் சொன்ன பட்டியலைப் போடாதவர்களுக்கு வேறு மாதிரியான பட்டியல்.

இதுவும் பட்டியல்தான். ஆனால், விஷயமே வேறு வகையானது. நேர் மாறானது. முன்பு சொன்ன பட்டியல் முறை, செய்து முடித்த வேலைகளை அல்லது செயல்களை ஞாபகப்படுத்தி பட்டியலாக்குவது. இது வேற மாதிரியானது. ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று நினைத்தவுடனே ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்வது. ஒவ்வொரு காரியமாக முடித்துக் கொண்டே வருவது. அன்றைய நாளில் முடிக்க முடியாத விஷயங்களை அடுத்த நாளில் முதல் காரியமாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் காலையிலிருந்தே அந்த திட்டமிடலுக்குத் தக்க உங்கள் பணிகளைச் செய்யலாம்.

இதனால், நீங்கள் ஒவ்வொரு முறையும் அந்தப் பட்டியலைப் பார்க்கும்போதும் நீங்கள் அன்று செய்த விஷயங்களைப் பார்ப்பதன் மூலமாக உங்களின் நினைவுத் திறன் மேம்படும். என்ன முக்கியமாக ஒரு விஷயத்தை நீங்கள் நிச்சயம் செய்தாக வேண்டும். தினமும் காலையில் எழுந்ததும் அந்தப் பட்டியலைப் பார்த்து ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். இரவில் படுக்கப் போகும் முன்பாக அந்தப் பட்டியலை அடுத்த நாளுக்காக திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டும்.

நாளடைவில் இந்தப் பட்டியல் போடும் முறை பழகிவிடும். அப்புறம் உங்களைப் பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்க வேண்டியிருக்கும். ஏனென்றால், இப்படிப் பட்டியல் போட்ட நிறைய பேரை இன்று அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டுதான் பார்க்க வேண்டியிருக்கிறது.

No comments: