Tuesday, September 23, 2008

பகத் சிங் என்ன சாதித்தார்?


எந்த ஒரு புத்தகத்தையும் எழுத ஆரம்பிக்கும்போது எந்தவிதமான முன் தீர்வுகளும் இல்லாமல் எழுதப் பழகிக் கொள். - எழுத்தாளர்கள் அடிக்கடி சொல்லும் விஷயம்.

இதை எத்தனை தூரம் கடைப்பிடிக்க முடியும் என்று தெரியவில்லை. ஒருவரைப் பற்றி எழுத ஆரம்பிக்கும்போதே கிடைக்கும் தகவல்களால் ஒருவித ஆச்சரியமும், இத்தனை விஷயங்கள் உண்டா என்ற மலைப்பும், இப்படியும் ஒரு வாழ்க்கையா என்ற வியப்பும் சூழ்ந்து கொள்வது இயல்புதான்.

என்.எஸ். கிருஷ்ணனை எழுதத் தொடங்கியபோது இருந்த பிரமிப்பும், எழுதி முடித்த பிறகு இருந்த ஆச்சரியமும் ஒரே விதமாக இருந்தன. அதிகம் மாற்றமில்லை. இன்று வரையிலும் கூட அவரைப் பற்றிய வெவ்வேறு தகவல்கள் கிடைக்கும்போது என்னுடைய பிரமிப்பும், வியப்பும் அதே நிலையில்தான் இருக்கின்றன.

ஆனால், எனது அடுத்த புத்தகமான ‘பகத்சிங்: துப்பாக்கி விடு தூது’, பகத் சிங்கின் வாழ்க்கையை எழுதும்போது இது மாறுபட்டது.

ஒருவரைப் பற்றி எழுத ஆரம்பிக்கும்போது இருக்கும் பிம்பத்துக்கும் புத்தகமாக எழுதி முடித்த பிறகு கிடைக்கும் பிம்பத்துக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் இருப்பது தெளிவாகப் புரிந்தன.

புத்தகத்துக்காக நிறைய தகவல்கள் திரட்டும்போதும், பகத் சிங் பற்றி நண்பர்கள் மத்தியில் பேசும்போதும் எதிர்பார்ப்புகள் பலமாக இருந்தன. ஆனால், புத்தகம் எழுதி முடித்த பிறகு பகத் சிங் மட்டுமல்லாது அந்த இயக்கத்தில் இருந்த பலரும் மனத்தில் நிறைந்திருந்தனர். குறிப்பாக அந்த இயக்கத்தின் தலைமையில் இருந்த சந்திரசேகர ஆசாத், காகோரி ரயில் கொள்ளைச் சம்பவத்தின் நாயகனாக இருந்த அஷ்ஃபகுல்லா கான், சாகும் வரை உண்ணாவிரதம் என்ற போராட்டத்தில் உயிர் நீத்த ஜதீந்திரநாத் தாஸ்.

பகத் சிங் வாழ்ந்த காலம் 23 வருடங்கள் மட்டுமே. இந்த 23 வருடத்தில் என்ன சாதித்திருக்க முடியும்? அதிலும் பள்ளிக்குச் செல்லும் பருவத்தில் சுதந்தரத்தைப் பற்றி என்ன தெரிந்து கொண்டிருக்க முடியும்?

அப்போதிருந்த சீக்கிய அமைப்புகள் வெள்ளையர்களுக்கு எதிராக எப்படிப் போராட்டம் நடத்தின? தன்னுடைய அப்பாவும் சித்தப்பாக்களும் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி சிறைக்குப் போனார்கள். நான் ஏன் போகக்கூடாது, என்ற பகத் சிங்கின் கேள்வி. லாலா லஜபதி ராயுடன் இருந்து காங்கிரஸ் மூலமாகப் போராட்டம் நடத்தியது, அஹிம்ஸை வழியில் எத்தனை காலம்தான் போராடிக் கொண்டிருக்க முடியும்? ஒரே ஒரு அதிர்ச்சித் தாக்குதலையாவது நிகழ்த்திக் காட்ட வேண்டும் இந்த அரசாங்கத்துக்கு என்று இயக்கத்தில் சேர்ந்தது, கொள்கைகளைப் பரப்பியது, தலைமறைவாகத் திரிந்த காலங்கள் - எனப் பல சம்பவங்கள்.

பகத் சிங் இன்றும் இந்திய சரித்திரத்தின் பக்கங்களில் நிலைத்திருப்பதற்கான காரணம் புரிந்தது. நாடாளுமன்றத்தில் இரண்டு குண்டுகளை வீசி கேளாத செவிகள் கேட்கட்டும் என்று இங்கிலாந்துப் பாராளுமன்றத்துக்கு கூக்குரல் விடுத்ததுதான் அந்தச் செயல் எனத் தோன்றியது.

புத்தகத்தில் பகத் சிங்கின் வாழ்க்கையை மட்டும் சொல்லிவிட்டுப் போவது என்பதும் இயலாத காரியம். ஆகவே, அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நிகழ்ந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அத்தனை விஷயங்களையும் இந்தப் புத்தகத்தில் சேர்த்தால்தான் சிறப்பாக இருக்குமென்று நினைத்தேன். அதன்படியே புத்தகம் வெளியானது. தற்போது விற்பனையில் பகத் சிங்: துப்பாக்கி விடு தூது.

2 comments:

லக்கிலுக் said...

உங்களது புதிய புத்தகம் விற்பனையில் சாதனை படைக்க வாழ்த்துக்கள்!

இன்னமும் புத்தகம் வாசிக்கவில்லை. உங்கள் முன்னுரை உடனே வாசிக்க தூண்டுகிறது!

superlinks said...

வணக்கம் தோழ‌ரே,
உங்க‌ளுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.
பாருங்க‌ள்.