Thursday, September 18, 2008

நான் ஏன் கொன்றேன்? - ஒரு போலீஸ்காரரின் வாக்குமூலம்

எப்போதாவதுதான் சில நல்ல புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு அமையும். அதுவும் சில பல நாட்களோ மாதங்களோ நம்முடைய நினைவில் அந்தப் புத்தகம் நின்றுவிட்டால் இன்னும் விசேஷம். சமீபமாகப் படித்த ஒரு புத்தகம் என் நினைவில் நின்றுவிட்டது.



1970 பிப்ரவரி 18.

நான்கு போலீஸ்காரர்கள் ஒரு கைதியைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள். உயர் அதிகாரி கேட்கிறார்: ”உங்களில் யார் இவனைச் சுட்டுக் கொல்லப் போகிறீர்கள்?”

மூன்று போலீஸ்காரர்கள் தயங்கித் தயங்கி கையைத் தூக்குகிறார்கள்.

கையைத் தூக்காமல் இருந்த போலீஸ்காரரிடம் அந்த அதிகாரி சொல்கிறார்: “இந்த வேலையை நீதான் செய்ய வேண்டும். அல்லது நக்சலைட்டுகளுடன் நடந்த மோதலில் மேலும் ஒரு கான்ஸ்டபிள் கொல்லப்படலாம்.”

ஒரே ஒரு தோட்டா. முடிந்தது அந்தப் போராளியின் கதை. ஆனால், சுட்டுக் கொன்ற வலியை இருபத்தெட்டு ஆண்டுகளாகத் தனக்குள் வைத்துக் குமுறிக் கொண்டிருந்த ஒரு கான்ஸ்டபிளின் சுய ஒப்புதல் வாக்குமூலம்தான் “நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி”.



அந்தப் போலீஸ்காரர் ராமச்சந்திரன் நாயர். ஆயுதப் படைப் பிரிவில் கேரளாவில் பணியிலிருந்தவர். கேரளாவில் போலீஸுக்குச் சங்கம் அமைக்க வேண்டும் என்று போராடியவர்களுள் இவரும் ஒருவர்.

எல்லோருடைய வாழ்க்கையிலும் சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் உண்டு. அத்தனையும் வெளியே சொல்ல முடியுமா தெரியவில்லை. ராமச்சந்திரன் நாயர் சொல்லியிருக்கிறார்.

விளைவு, வர்க்கீஸைச் சுட்டுக் கொன்ற வழக்கில் ராமச்சந்திரன் முதல் குற்றவாளி.

0

ஒரு போலீஸ்காரரின் சுயசரிதையில் அப்படி என்ன இருந்துவிட முடியும்? உயர் அதிகாரிகளைப் பற்றிப் புகழ்ந்து எழுதியிருப்பார். தமக்கு வேண்டிய பல அரசு அதிகாரிகளைப் பற்றி ஆஹா ஓஹோவென்று சொல்லியிருப்பார்கள். வேண்டப்பட்ட அரசியல் தலைவர்களுக்குத் தாங்கள் செய்த 'சேவை'யை நினைவுபடுத்துவதாக எழுதுவார்கள்.

இவை எதுவுமே இந்தப் புத்தகத்தில் இல்லை. இது ராமச்சந்திரன் என்பவரின் வாழ்க்கை. இரட்டை வாழ்க்கை. ஒன்று போலீஸ் வாழ்க்கை. போலீஸ் என்ற அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்ட வாழ்க்கை. போலீஸாக இருந்துகொண்டு தாம் பொதுமக்களுக்குச் சேவை செய்த வாழ்க்கை. இரண்டும் கலந்த ஒரு மனிதனுக்குள் பல்லாண்டு காலமாக முன் நின்ற ஒரே கேள்வி, நான் எப்படி ஒருவனைக் கொன்றேன்? என்பதுதான்.

'இது உயர் அதிகாரியின் கட்டளை. ஆகவே, நான் சுட்டுக் கொன்றேன்' என்று இவர் சொல்லவில்லை.

தன்னுடைய உயர் அதிகாரி தவறு செய்கிறார் என்று தெரிகிறது. ஆனால், அதைச் சொன்னாலும் யாரும் கேட்கவில்லை. இந்த உண்மைகள் காவல்துறையோடு அமுங்கிவிடக் கூடாது என்று தனக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், விஷயம் வெளியே தெரியவில்லை.

எதற்கும் நேரம் வரவேண்டும் என்று சொல்வார்களே? அந்த நேரமும் வந்தது. மலையாள மனோரமாவில் ராமச்சந்திரனின் கடிதம் பிரசுரமானது. அந்தக் கடிதம் வர்க்கீஸைச் சுட்டுக் கொன்றதைப் பற்றி தோழர் வாசுவுக்கு வாக்குமூலம் கொடுத்த கடிதம்.

மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று அப்போதுதான் நம்பத் தொடங்கினார் ராமச்சந்திரன். சி.பி.ஐ., ராமச்சந்திரன் மேல் வழக்குப் போட்டது.

சிறை செல்லப் போகிறோம் என்றெல்லாம் ராமச்சந்திரன் கவலைப்படவில்லை. தன்னைச் சுடச் சொன்ன அதிகாரிகளுடன் தான் ஒரு நாளாவது சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று காத்திருந்தார். அவருடைய ஆசை நிறைவேறவில்லை. வழக்கின் முதல் குற்றவாளி இயற்கை மரணமடைந்தார்.

ஆம், ராமச்சந்திரன் இப்போது இல்லை.

0

புத்தகத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான சம்பவம் மட்டும்:

சந்திரசேகரன், ஒரு போலீஸ்காரர். மேலதிகாரியின் வீட்டில் அவருக்கு வேலை. சந்திரசேகரனின் மனைவி ஒரு கிராம நிர்வாக அதிகாரி. தன் கணவரைப் பார்க்க அந்த ஊருக்கு வருகிறார். வேலை பார்க்கும் இடத்தைக் கேள்விப்பட்டு அந்த வீட்டுக்கே வந்துவிடுகிறார். வந்த இடத்தில் மேலதிகாரி வரவேற்று உட்கார வைக்கிறார். வந்தவருக்கு தேநீர் கொண்டு வரச் சொல்கிறார்.

உள்ளிருந்து தேநீர் வருகிறது. அந்தப் பெண் நிமிர்ந்து பார்க்கிறார். கரிப்பிடித்த காக்கி டிரவுசர். கை வைத்த பனியன். கையில் டிரே. சுடச் சுடத் தேநீர். தேநீருடன் நின்றவர் சந்திரசேகரன்.

”நீங்க இந்த வேலையை வீட்டிலேயே செய்யலாமே? குழந்தைகளைப் பாத்துகிட்டது போலவும் இருக்கும்” என்று சொல்லிவிட்டு சந்திரசேகரனின் மனைவி வெளியேறுகிறார்.

0

நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி - ராமச்சந்திரன் நாயர் / தமிழில்: குளச்சல் மு.யூசுப். வெளியீடு: மக்கள் கண்காணிப்பகம், மதுரை. விலை: ரூ. 120/-

1 comment:

யூர்கன் க்ருகியர் said...

எல்லா போலீஸ்காரங்களும் சுய சரிதை வெளியிட்டாங்கன்னா பெரிய தலைகளெல்லாம் உள்ளதான் இருக்கும் போலிருக்கே!

போலீஸ்-க்கு சங்கமெல்லாம் வைச்சாங்கன்னா ஸ்டிரைக் பண்ணுவாங்களோ!