Friday, June 11, 2004

·ப்ரான்க் ஒ' கானரின் கதை

வாங்க, நேரா இங்கதான் வர்றீங்களா! அப்ப ஒரு வேலை செய்யலாம். இப்ப நேரா தமிழோவியத்துக்குப் போய் அங்க இருக்கும் இந்த வார உங்களுக்குள்ளே சில புதிர்கள் கட்டுரையைப் படிச்சுட்டு இங்க வருவோம். அதுதான் சரியானதாக இருக்கும். அப்புறம் இங்க வந்து ·ப்ரான்க் ஓ கானர் கதையைப் படிக்கலாம்.



·பிராங்க் ஓ கானர்
__________________

·ப்ராங்க் ஓ கானர் 1903-ஆம் ஆண்டு, அயர்லாந்தின் கார்க் நகரத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர். அயர்லாந்தின் சுதந்திரத்துக்காக அவர் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினார். புகழ்பெற்ற ஆபி தியேட்டரின் டைரக்டராக சிலகாலம் இருந்தார். நாடகங்களும் விமர்சனங்களும் அவர் எழுதியிருப்பினும், சிறுகதைகளே அவருடைய புகழுக்கு வழிகோலின. "நியூயார்க்கர்' பத்திரிகையில் அவர் அடிக்கடி எழுதுவதுண்டு. 1952-இல் அவர் தம் சிறுகதைகள் அனைத்தையும் திரட்டி ஒரு தொகுப்பாக வெளியிட்டார். அவருடைய எழுத்தில் உயிரோட்டமும் நகைச்சுவையுணர்வும் தூக்கலான அம்சங்கள்.



என் ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் - தமிழில்: திலகவதி
_____________________________________


போர் நடந்து கொண்டிருந்த காலம் முழுவதும் அப்பா ராணுவத்தில் இருந்தார். முதலில் நடந்த போரை சொல்லுகிறேன். எனக்கு ஐந்து வயதாகிறவரை நான் அவரை அதிகம் பார்த்ததில்லை. நான் அவரை பார்த்த சில சமயங்களும் எனக்குத் தெளிவாக நினைவில்லை. சில வேளைகளில், நான் கண் விழிக்கும்போது காக்கி உடை அணிந்த ஒரு பெரிய உருவம் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும். சில சமயங்களில், அதிகாலையில், முன் கதவு அறைந்து சார்த்தப்படும் சத்தமும். லாடம் அடித்த அப்பாவின் பூட்ஸ் சந்தில் ஒலியெழுப்புவதும் கேட்கும். அப்பா வருவதும் போவதும் இப்படித்தான். கிறிஸ்துமஸ் தாத்தா போல அவர் வருவதும் போவதும் புதிராகவே இருக்கும்.

நான் விடியற்காலையில் அம்மாவுக்கும் அவருக்கும் நடுவில் பெரிய படுக்கையின் மீது ஏறிப் படுத்துக் கொள்ளும்போது, அசௌகர்யத்தால் நான் நசுங்கிப் போனபோதும்கூட, உண்மையில் அவர் வருகை எனக்குப் பிடித்திருந்தது. அவர் புகைக்கும்போது அவரைச் சுற்றி ஒருவிதமான இனிய வாடை வீசும். வியக்கத்தக்க விதத்தில் என் ஆவலைக் கிளறும் படியாக அவர் சவரம் செய்து கொள்வார். மாதிரி டாங்கிகள், குண்டுப் பெட்டிகளால் கைப்பிடி போடப்பட்ட கூர்க்காக் கத்திகள், ஜெர்மன் ஹெல்மெட்டுகள், பேட்ஜ்கள், மடக்குக் கத்திகள், இன்னும் பலவிதமான ராணுவக் கருவிகள் என்று ஏராளமான பொருட்களை அவர் விட்டுவிட்டுச் செல்வார். சமயத்தில் உதவும் என்று, அவற்றை, பீரோவின் மேல் இருந்த நீண்ட பெட்டியில் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பாக வைப்பார். அப்பா, அந்தப் பொருட்களின் உபயோகம் பற்றி வளவளவென்று பேசுவார், எல்லாப் பொருட்களும் சமயத்தில் உபயோகப்பட வேண்டும். அவர் அந்தப் பக்கம் மறைந்ததும் அம்மா, என்னை ஒரு நாற்காலியை இழுத்துப் போடச் சொல்லி அதில் ஏறி அவருடைய புதையலைக் கலைத்துப் போடுவாள். அவரைப்போல, அவள், அவற்றை அத்தனை உயர்வாக மதித்ததாகத் தெரியவில்லை.

என் வாழ்க்கையின் மிக அமைதியான காலம். யுத்த காலம்தான். என் அறையின் ஜன்னல் தென்கிழக்கு திசையை நோக்கியிருந்தது. என் அம்மா அதற்கு திரைச்சீலை போட்டிருந்தாள். ஆனாலும் அது பெரிய தடையாக இருக்கவில்லை.

கீழ்வானம் வெளுக்கத் தொடங்கும்போது நான் தினமும் விழித்தெழுவேன். முந்திய தினத்தின் பொறுப்புகளெல்லாம் கரைந்து போக நானே இன்னொரு சூரியனைப் போல குதூகலமாகவும், ஆனந்தமாகவும் உணர்வேன். அப்போது இருந்ததுபோல வாழ்க்கை அத்தனை எளிமையாகவும், தெளிவாகவும், எப்பேர்ப்பட்ட விஷயங்களும், செய்யக் கூடியவையாகவும் வேறு எப்போதும் இருந்ததில்லை. நான் அவற்றை திருமதி.இடது என்றும் திருமதி.வலது என்றும் அழைத்தேன். திருமதி வலது, அன்றாட பிரச்சினைகளைக் குறித்து, அவை, தமக்குள் விவாதித்துக் கொள்வது போன்ற நாடகங்கள் நடத்தும், திருமதி.இடது, அப்படியில்லை. ஆகவே, பெரும்பாலான சமயங்களில் தலையசைத்து தன் அங்கீகாரத்தை தெரிவிப்பதுடன் நிறுத்திக் கொண்டுவிடும்.

நானும் அம்மாவும் அன்றைய தினம் என்ன செய்ய வேண்டும் என்று விவாதிப்போம். கிறிஸ்துமஸ் தாத்தா என்ன பரிசுகள் தரவேண்டும் என்றும், வீட்டை எப்படி அலங்கரிப்பது என்றும் விவாதிப்போம். எடுத்துக்காட்டாக, குழந்தையைப் பற்றிய அந்த விஷயம். அதைப் பொறுத்த அளவில் அம்மாவுக்கும் எனக்கும் உடன்பாடு ஏற்படவேயில்லை. அந்தப் பகுதியிலேயே, சின்னக் குழந்தை இல்லாத வீடு எங்களுடையதுதான். அதற்கு அதிகம் செலவாகும். ஆகையால், அப்பா வரும்வரை அது சாத்தியமில்லை என்பாள் அம்மா.

இது அவளுடைய அறியாமையையே காட்டியது. தெருக்கோடியில் இருந்த ஜீனிஸ் வீட்டிலும் சின்னக் குழந்தை இருந்தது, அவர்கள் அவ்வளவு வசதியானவர்கள் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஒருவேளை அது மலிவான குழந்தையாக இருக்கும். உண்மையில் நல்லதொரு குழந்தையை அம்மா விரும்பினாள். அம்மாவுக்கு எல்லாமே விசேஷமாக இருக்க வேண்டும். ஆனால், ஜீனிஸ் வீட்டுக் குழந்தை போன்ற ஒரு குழந்தையேகூட எங்களுக்குப் பொருத்தமான ஒன்றாக இருந்திருக்கும்.

அன்றைய தினத்துக்கான திட்டங்களை வகுத்துக் கொண்டுவிட்ட பிறகு, நான், எழுந்துபோய் என் அறைச் சன்னலின் கீழ் நாற்காலியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தேன். ஜன்னல் கண்ணாடியை உயர்த்தி, என் தலையை வெளியே நீட்டினேன். பக்கத்து வீட்டுத் தோட்டத்தைப் பார்த்தாற்போல் இருந்தது எங்கள் ஜன்னல். எதிரில் தெரிந்த குன்றுகளை அடுத்திருந்த பள்ளத்தாக்கும், சிவப்புச் செங்கல்லால் கட்டப்பட்ட வீடுகளும் இன்னமும் இருளிலேயே இருந்தன. எங்கள் வீட்டுப் பக்கம் இருந்த வீடுகளின் மேல் வெளிச்சம் பட்டுக்கொண்டிருந்தது. விநோதமான நீண்ட நிழல்களுடன், அவை, பரிச்சயம் இல்லாத இடங்கள் போலவும், தீட்டப்பட்ட சித்திரங்கள் போலவும் காணப்பட்டன.

அதன்பிறகு, நான் என் அம்மாவின் அறைக்குப் போய் பெரிய மெத்தையின் மேல் ஏறிக்கொண்டேன். அம்மா விழித்ததும் என் திட்டங்களைச் சொன்னேன். நான் அதுவரை கவனிக்கவில்லையெனினும் குளிரினால் விறைத்துப் போய்விட்டிருந்தேன். விறைப்பு நீங்கி, என்மேல் படிந்திருந்த பனித் துகள்கள் உருகும் வரை பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்படியே அம்மாவின் பக்கத்தில் படுத்தபடி தூங்கிப் போனேன். பிறகு, அம்மா கீழே காலை உணவு தயாரிக்கிற சத்தம் கேட்டுத்தான் எழுந்தேன்.

காலை உணவுக்குப் பிறகு நாங்கள் டவுனில் இருந்த புனித அகஸ்தீன் தேவாலய பூசைக்குப் போனோம். அப்பாவுக்காக ஜெபம் செய்துவிட்டு, கடை கண்ணிகளுக்குப் போனோம். பிற்பகலில் சீதோஷ்ண நிலை சரியாக இருந்தால் அப்படியே காலாற நடப்போம். அல்லது கான்வெண்டுக்குப் போய் அம்மாவின் அருமைச் சிநேகிதியான புனித தொமினிக் மதரை சந்திப்போம். அம்மா, அவர்களை, அப்பாவுக்காக ஜெபிக்கச் சொல்வாள். அப்பா, போர் முடிந்ததும் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் படுக்கைக்குப் போவதற்கு முன்னால் நான் கடவுளை வேண்டிக் கொள்வேன். உண்மையில் நான் எதற்காக பிரார்த்திக்கிறேன் என்பதை அப்போது நான் அறிந்து கொள்ளாதவனாகவே இருந்தேன்.

ஒருநாள் காலை, நான், பெரிய மெத்தையில் படுப்பதற்காக நான் கட்டிலில் ஏறியபோது, தன்னுடைய வழக்கமான கிறிஸ்துமஸ் தாத்தா பாணியில் அப்பா வந்துவிட்டிருந்ததைப் பார்த்தேன். அது நிச்சயமாக அவரேதான். ஆனால், வழக்கமான சீருடை அணிந்து கொள்ளாமல், அவர், அருமையான நீல சூட்டை அணிந்திருந்தார். அம்மாவுக்குக் கொள்ளை மகிழ்ச்சி. அப்படி மகிழ்வதற்கு அதில் என்ன இருந்தது என்று எனக்குப் புரியவில்லை. ஏனென்றால், சீருடையணியாத அப்பா அப்படியொன்றும் சுவாரஸ்யமானவராக எனக்குப் படவில்லை. ஆனால், அவள்தான் மகிழ்ச்சி பொங்க "கடவுள் நம் ஜெபங்களுக்கு செவி சாய்த்தார்' என்றாள். அப்புறம், அப்பாவைப் பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு வந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்வதற்காக நாங்கள் தேவாலயத்துக்குப் போனோம்.

வேதனை என்னவென்றால், அன்றைய தினமே, அப்பா சாப்பாட்டுக்கு வரும்போது, பூட்சைக் கழற்றிவிட்டு, செருப்புகளையும், ஜலதோஷம் வந்துவிடாமல் தடுப்பதற்காக ஒரு பழைய அழுக்குத் தொப்பியையும் அணிந்துகொண்டு கால் மேல் கால் போட்டபடி, கவலையுடன் காட்சியளித்த அம்மாவிடம் முக்கியமான ஏதோ ஒன்றைப் பற்றிப் பேச ஆரம்பித்ததுதான். கவலை கொண்ட முகத்தோற்றம் அம்மாவின் அழகைக் குலைத்துவிடுவதால், அவள் கவலைப்படுவது எனக்குப் பிடிக்காது. எனவே, நான் அவர் பேச்சில் குறிக்கிட்டேன்.

"லேறி! ஒரு நிமிஷம் பொறு!'' என்று அம்மா மென்மையாகச் சொன்னாள்.

சலிப்பு ஏற்படுத்தும் விருந்தாளிகள் வரும்போதுதான் அவள் அப்படிச் சொல்வது வழக்கம் என்பதால், நான் அதைப் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டே போனேன்.

அம்மா பொறுமை இழந்தவளாக, "பேசாமல் இரு லேறி. நான் டாடியிடம் பேசிக்கொண்டிருப்பது உன் காதில் விழவில்லையா?'' என்று சொன்னாள்.

"டாடியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது'' என்னும் விபரீத வார்த்தைகளை முதன்முதலாக நான் அப்போதுதான் கேட்டேன். கடவுள் பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்க்கிற விதம் இதுவானால், அவர் பிரார்த்தனைகளைக் கேட்பதில் அக்கறை கொண்டவராய் இருந்திருக்க முடியாது என்று என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

எத்தனை அலட்சியத்தை என்னால் திரட்ட முடியுமோ, அத்தனை அலட்சியத்தையும் திரட்டி, "நீ எதற்கு டாடியுடன் பேசுகிறாய்'' என்று பெரிதாக பாவ்லா பண்ணியபடி கேட்டேன்.

"ஏனென்றால் எனக்கும் டாடிக்கும் பேசிக் கொள்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. இப்போது மீண்டும் குறுக்கே பேசாதே.''

பிற்பகலில் அம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி அப்பா என்னை வெளியே அழைத்துச் சென்றார். வழக்கம்போல ஊருக்குள் போகாமல் நாங்கள் டவுனுக்குப் போனோம். எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கும் என் இயல்பின்படி நான் இதையும் ஒரு நல்ல விஷயம் என்றே எண்ணினேன். ஆனால், அது ஒன்றும் அப்படி இருக்கவில்லை. டவுனுக்குள் எப்படி நடந்து போவது என்பது பற்றி எனக்கும் என் அப்பாவுக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருந்தன. டிராம்கள், கப்பல்கள், குதிரைகள் ஆகியவற்றில் அவருக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. தன்னை ஒத்த பேர்வழிகளிடம் பேசுவதில் மட்டுமே அவருக்கு ஆர்வம் இருந்தது. நான் நிற்க விரும்பிய போதெல்லாம், அவர், என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தபடி இருந்தார். ஆனால், அவர் நிற்க விரும்பியபோது மட்டும், நான், நின்றேயாக வேண்டியிருந்தது. சுவரின் மீது எப்போதாவது சாய்ந்தால், அது, அங்கு அவர் நீண்ட நேரம் நிற்கப் போகிறார் என்பதற்கு அடையாளம் என்று நான் அறிந்து கொண்டேன். இரண்டாவது முறையாக அவர் அப்படிச் செய்ததைக் கண்டதும் எனக்குக் கோபம் வந்தது. அவர் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுவார் போலத் தோன்றியது. நான், அவருடைய கோட்டையும் கால் சட்டையையும் பிடித்து இழுத்தேன். நான் பிடிவாதம் பிடிக்கும்போது சீற்றங்கொண்டு "லேறி ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் அறை வாங்குவாய்'' என்று சொல்லும் அம்மாவைப் போலில்லாமல், என்னைக் கண்டு கொள்ளாமல் இருந்துவிடக்கூடிய அபூர்வ திறமை அப்பாவுக்கு இருந்தது. நான் அழுதால்கூட அவர் கொஞ்சமும் எரிச்சல் அடையவில்லை. உண்மையிலேயே அவருடன் வெளியே போவது ஒரு மலையுடன் போவதுபோல இருந்தது. நான் இழுத்ததையும் குத்தியதையும் அவர் ஒன்று முழுமையாகப் புறக்கணித்தார் அல்லது இளித்தபடி ஏதோ ஒரு சிகரத்தின் மேலிருந்து வேடிக்கை பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் போன்ற சுயநலக்காரரை நான் பார்த்ததே இல்லை.

தேநீர் வேளையில் "டாடியுடன் பேசுவது' மறுபடியும் ஆரம்பித்தது. அவர் கையில் வைத்திருந்த செய்தித்தாளை சில நிமிடங்களுக்கு ஒருமுறை கீழே வைத்துவிட்டு புதிதாக அம்மாவிடம் எதையெதையோ சொல்லிக் கொண்டிருந்ததில் நிலைமை மேலும் சிக்கலானது. இது ஒரு தப்பாட்டம் என்று எனக்குத் தோன்றியது. ஆணுக்கு ஆண் என்ற முறையில் அவருடன் போட்டி போட்டு அம்மாவின் கவனத்தைக் கவர நான் தயாராக இருந்தேன். ஆனால், மற்றவர்கள் எல்லோரும் அவருக்குச் சாதகமாக காரியங்களைச் செய்து தரும்போது, எனக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே தெரியவில்லை. பேச்சை திசை திருப்ப பலமுறை முயன்று நான் தோற்றுப் போனேன்.

"லேறி! டாடி படிக்கும்போது நீ அமைதியாக இருக்க வேண்டும்'' என்று அம்மா பொறுமையிழந்தவளாகச் சொன்னாள். உண்மையிலே அவளுக்கு என்னுடன் பேசுவதைவிட அப்பாவுடன் பேசுவது பிடித்திருக்கலாம். அல்லது. உண்மையை ஒத்துக்கொள்ளத் தயங்குமளவுக்கு அவளை அவர் ஏதோ ஒருவிதமான பயத்தில் வைத்திருக்க வேண்டும்.

அன்று இரவு அம்மா எனக்கு போர்வை போர்த்திவிட்டபோது, "மம்மி. நான் மறுபடியும் கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்டால் அப்பா யுத்தத்துக்குப் போய்விடுவாரா?'' என்று கேட்டேன்.
அம்மா ஒரு கணம் யோசிப்பது போலத் தோன்றியது. "இல்லை, கண்ணே! அவர் போகமாட்டார்'' என்று புன்னகையுடன் அம்மா சொன்னாள்.

"ஏன் மம்மி அவர் போகமாட்டார்?''

"ஏனென்றால், இப்போது ஒரு யுத்தமும் நடக்கவில்லை.''

"அது சரி. ஆனால் கடவுள் விரும்பினால் இன்னொரு யுத்தத்தை உண்டாக்க முடியாதா?'' என்றேன் நான்.

"கடவுள் அதை விரும்பமாட்டார் கண்ணே. யுத்தத்தை கடவுள் உண்டாக்குவதில்லை. கெட்ட மனிதர்கள்தான் அதை உண்டாக்குகிறார்கள்.''

"ஓ'' என்றேன் நான்.

எனக்கு அது ஏமாற்று வேலையாக தெரிந்தது. கடவுள் நான் நினைத்ததைப் போன்றவரல்ல கடவுள் என்று எண்ணத் தொடங்கினேன்.

மறுநாள் காலை வழக்கம்போல அதே நேரத்துக்கு எழுந்தேன். பொங்கி வழியும் ஷாம்பெய்ன் பாட்டிலைப் போல உற்சாகத்துடன் இருந்தேன். என் பாதங்களை வெளியே நீட்டி திருமதி.வலது தன்னுடைய சொந்த அப்பாவால் அனுபவித்த தொல்லைகளையும், பிறகு அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்ததையும் பற்றிய நீண்ட உரையாடலைக் கற்பனையில் நிகழ்த்தினேன். முதியோர் இல்லம் என்றால் என்ன என்பது எனக்குத் தெளிவாகத் தெரியாவிட்டாலும், அது அப்பாவுக்குப் பொருத்தமான இடம் என்று எனக்குப் பட்டது. பிறகு, நான், என் நாற்காலியை எடுத்துப்போட்டு உட்கார்ந்து தலையை வெளியே நீட்டினேன். கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்ட குற்ற மனப்பான்மையுடன் பொழுது விடிந்து கொண்டிருந்தது. கதைகளுடனும் திட்டங்களுடனும் தலை வெடித்துக் கொண்டிருக்க, நான் தட்டுத் தடுமாறி அடுத்த அறைக் கதவை அணுகி அரை இருளில் பெரிய மெத்தையில் விழுந்தேன். அம்மாவுக்கு பக்கத்தில் இடமில்லாதலால், நான், அவளுக்கும் அப்பாவுக்கும் இடையே புக வேண்டியதாயிற்று. நான், அப்பாவைப் பற்றி சற்று நேரம் மறந்துபோய் பல நிமிடங்கள் அப்படியே நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவரை என்ன செய்வது என்று என் மூளையைப் போட்டுக் கசக்கிக் கொண்டேன். அவர் படுக்கையில் தன்னுடைய பங்குக்கும் மேற்பட்ட அளவு இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது எனக்கு அசௌகர்யமாக இருந்தது. ஆகவே, முனகி நெளியுமளவுக்கு அவருக்குப் பல உதைகள் கொடுத்தேன். அவர் ஒரு வழியாக நகர்ந்து எனக்கு இடம் கொடுத்தார். அம்மா எழுந்து என்னைத் தடவிக் கொடுத்தாள். நான், வாயில் கட்டை விரலைப் போட்டபடி படுக்கையின் கதகதப்பில் சௌகரியமாகப் படுத்தேன்.

"மம்மி'' என்று திருப்தியுடனும், சத்தமாகவும் ராகம் இழுத்தேன்.

"ஷ்... டாடியை எழுப்பி விடாதே கண்ணே'' என்று அவள் கிசுகிசுத்தாள். இது "டாடியுடன் பேசுவதை" விட பயங்கரமான மிரட்டலாக, புதியதோர் மாற்றமாக இருந்தது. அதிகாலை நேர மந்திராலோசனை இல்லாத தினத்தை என்னால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

"ஏன்?'' என்று நான் கடுமையாகக் கேட்டேன்.

"ஏனென்றால், டாடி பாவம். களைத்துப் போயிருக்கிறார்''. இது சரியான காரணமாக எனக்குப் படவில்லை.
"டாடி பாவம்'' என்கிற அவளுடைய நெகிழ்ச்சியான விளக்கம் எனக்கு எரிச்சல் ஊட்டியது. இந்த மாதிரியான தேனொழுகும் பேச்சு எனக்குப் பிடிப்பதில்லை. அது போலியானது என்று எனக்கு எப்போதும் தோன்றும்.

"ஓ'' என்று அலட்சியமாகச் சொன்னேன்.

"மம்மி, இன்றைக்கு நாம் எங்கே போக வேண்டும் தெரியுமா?'' என்று வெற்றி தொனிக்கும் குரலில் கேட்டேன்.

"இல்லை கண்ணே'' என்று அவள் பெருமூச்சு விட்டாள்.

"கிளென்னுக்குப் போய் என் புது வலையில் மீன்களைப் பிடிக்க வேண்டும். பிறகு ·பாக்ஸ் அண்டு ஹௌண்ட்சுக்குப் போய்...''

"டாடியை எழுப்பி விடாதே'' என்று கோபத்துடன் சீறியபடி என் வாய்க்குக் குறுக்கே அம்மா தன் கையை வைத்தாள்.

ஆனால், அதற்குள் காரியம் மிஞ்சிவிட்டது. அவர் விழித்துக் கொண்டுவிட்டார். அதாவது, கிட்டத்தட்ட விழித்துக் கொண்டார். அவர் முனகிக் கொண்டு தீப்பெட்டியை நோக்கி கைகளை நீட்டினார். பிறகு நம்ப முடியாதவராகக் கடிகாரத்தைப் பார்த்தாள்.

அம்மா தாழ்ந்த ரகசியக் குரலில், "டீ வேண்டுமா அன்பே'' என்றாள். அவள் அப்படிப் பேசி இதற்கு முன்னார் நான் கேட்டதேயில்லை. அவள் கிட்டத்தட்ட பயந்து போனது போல இருந்தது.

"டீயா? இப்போது நேரம் என்ன என்று உனக்குத் தெரியுமா?'' எகத்தாளமாக அவர் கேட்டார்.
இத்தகைய குறுக்கீடுகளால் நான் நினைத்தது மறந்து போய் விடக்கூடும் என்று பயந்தவனாக, "அதற்குப் பிறகு நாம் ராத்கூனி சாலைக்குப் போக வேண்டும்'' என்று நான் சத்தமாகச் சொன்னேன்.

"லேறி! நீ இப்போது உடனே போய்த் தூங்க வேண்டும்'' என்று அம்மா நறுக்கென்று சொன்னாள்.
நான் சிணுங்கி அழுதேன். அவர்கள் இருவரும் நடந்து கொண்டவிதம் காரணமாக, என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. என்னுடைய காலை நேரத் திட்டங்களை அழிப்பது ஒரு குடும்பத்தை அப்படியே புதைப்பது போல் இருந்தது.

அப்பா ஒன்றும் பேசவில்லை. பைப்பை பற்ற வைத்து புகையை இழுத்தபடி அம்மாவையோ என்னையோ பொருட்படுத்தாமல் ஜன்னல் வழியே வெளியே தெரிந்த நிழல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு கிறுக்கு என்று எனக்குத் தெரியும். ஒவ்வொரு தடவையும் நான் வாயைத் திறந்ததும் அம்மா எரிச்சல் அடைந்து என்னை அடக்கினாள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இது நியாயமே இல்லை என்று எனக்குப் பட்டது. அதில் ஏதோ கெட்ட எண்ணம் இருப்பதாகக்கூடத் தோன்றியது. ஒவ்வொரு தடவையும் இரண்டு படுக்கைகள் விரிப்பது விணானது என்று நான் சொன்னபோதெல்லாம், அதுதான் ஆரோக்கியமான விஷயம் என்று சொல்லி வந்த அம்மா, இப்போது இந்த மனிதனுடன், இந்த அந்நியனுடன் ஆரோக்கியம் பற்றிய கவலை கொஞ்சமும் இல்லாமல் ஒரே படுக்கையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறாள்!

அவர், சீக்கிரம் எழுந்து டீ போட்டார். அம்மாவுக்கு ஒரு கோப்பை டீ தந்தார். ஆனால் எனக்குத் தரவில்லை.

"மம்மி! எனக்கு டீ வேண்டும்'' என்று நான் கத்தினேன்.

"சரி, கண்ணே, நீ அம்மாவின் கோப்பையிலிருந்தே குடி'' என்று அவள் பொறுமையாகச் சொன்னாள்.
விஷயம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அப்பா அல்லது நான் இருவரில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.

அம்மாவின் கோப்பையிலிருந்து டீ குடிக்க எனக்குப் பிடிக்கவில்லை. நான் என்னுடைய சொந்த வீட்டில் பிறர்க்குச் சமமாக நடத்தப்பட வேண்டுமென்று விரும்பினேன். எனவே, அம்மாவைப் பழிவாங்குவதற்காகவே அம்மாவுக்கு எதுவும் மிச்சம் வைக்காமல் எல்லாவற்றையும் நானே குடித்துவிட்டேன். அம்மா அதையும் அமைதியாக ஏற்றுக் கொண்டாள்.

ஆனால், அன்று இரவு எனக்கு படுக்கை விரித்தபோது, "லேறி! நீ எனக்கு ஒரு உறுதிமொழி தர வேண்டும்'' என்று அவள் மென்மையாகக் கேட்டாள்.

"என்ன அது?'' என்று நான் கேட்டேன்.

"காலையில் வந்து பரிதாபத்துக்குரிய டாடியை நீ தொல்லை செய்யக்கூடாது. சரியா?''

மறுபடியும், "பரிதாபத்துக்குரிய டாடி'. அந்த சகிக்க முடியாத மனிதன் சம்பந்தமான எல்லா விஷயங்களையும் நான் சந்தேகிக்கத் தொடங்கினேன்.

"ஏன்'' என்று கேட்டேன்.

"ஏனென்றால், பரிதாபத்துக்குரிய டாடி, கவலையும் களைப்புமாக இருப்பதால் சரியாகவே தூங்குவதில்லை.''

"அவர் ஏன் தூங்குவதில்லை மம்மி?''

"சரி, உனக்குத் தெரியும் இல்லையா? அவர் யுத்தத்துக்குப் போயிருந்தபோது அம்மாவுக்கு தபால் ஆபஸில் இருந்து பணம் வருமே?''

"மிஸ் மக்கார்த்தியிடமிருந்தா?''

"ரொம்ப சரி. ஆனால் இப்போது மிஸ்.மக்கார்த்தியிடம் பணம் இல்லை. ஆகவே, டாடி போய்த்தான் அதைச் சம்பாதிக்க வேண்டும். அவரால் அது முடியவில்லை என்றால், என்ன ஆகும் தெரியுமா?''

"தெரியாது சொல்லு'' என்றேன்.

"வெள்ளிக்கிழமைகளில் பிச்சை எடுக்கிற அந்த ஏழைக் கிழவியைப் போல நாமும் பிச்சையெடுக்க வேண்டியதுதான். அது நமக்குப் பிடிக்காது இல்லையா?''

"இல்லை. நமக்குப் பிடிக்காது'' என்று நான் ஒப்புக் கொண்டேன்.

"எனவே, "நான் இனிமேல் டாடியை எழுப்பித் தொல்லை தரமாட்டேன்' என்று சத்தியம் செய்.''

"சத்தியம்.''

நான் மனப்பூர்வமாகத்தான் இப்படிச் சொன்னேன். பணத்தின் மகிமை எனக்குத் தெரியும். வெள்ளிக் கிழமைகளில் பிச்சை எடுக்கும் கிழவியைப் போல பிச்சை எடுக்க எனக்குப் பிடிக்காது. அம்மா, படுக்கையைச் சுற்றி என் பொம்மைகளை வளையம் போல் வைத்தாள். ஆகவே, நான் தரையில் எந்தப் பக்கத்தில் கால் வைத்தாலும், அவற்றில் ஏதாவதொன்றின் மீது இடறி விழுந்தேயாக வேண்டும்.

காலையில் எழுந்தபோது நான் செய்து கொடுத்திருந்த சத்தியம் எனக்கு நினைவில் இருந்தது. எழுந்து தரையில் உட்கார்ந்தபடி மணிக்கணக்கில் விளையாடினேன். பிறகு, என் நாற்கலியில் உட்கார்ந்து ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு மணிக்கணக்கான நேரத்தை செலவழித்தேன். அப்பா விழித்து எழுந்து விட்டிருந்தால் நன்றாயிருக்கும் என்று எனக்குத் தோன்றியது. யாராவது எனக்கு ஒரு கோப்பைத் தேநீர் தந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்க எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குச் சலிப்பாக இருந்தது. ரொம்பவும் குளிராக இருந்தது. என்னுடைய பெரிய சிறகுப் படுக்கையின் கதகதப்புக்காகவும் மென்மைக்காகவும் நான் ஏங்கினேன்.

கடைசியாக, என்னால் பொறுக்க முடியாமல் போய்விட்டது. நான், அடுத்த அறைக்குப் போனேன். அம்மாவுக்குப் பக்கத்தில் இடம் இல்லாததால், நான், அவள் மேல் ஏறிக் குதித்தேன். அவள் அதிர்ச்சியடைந்தவளாகக் கண்விழித்தாள்.

என் கைகளை மிகவும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, "லேறி! நீ நேற்று என்னவென்று சத்தியம் செய்து கொடுத்தாய்'' என்று ரகசியமாகக் கேட்டாள்.

"நான் அதன்படிதான் நடந்து கொண்டேன் மம்மி. நான் எவ்வளவு நேரம் அமைதியாக இருந்தேன்'' என்று கையும் களவுமாகப் பிடிபட்டவனைப் போல அழுதேன்.

"ஓ! கண்ணே! நீ தொலைந்தாய்'', என்று அவள் கவலையோடு சொன்னாள். என்னைத் தடவிக் கொடுத்தாள்.
"சரி. நான் உன்னை இங்கே இருக்கவிட்டால், நீ பேசாமல் இருப்பாய் என்று எனக்குச் சத்தியம் செய்து தருவாயா'' என்றாள்.

"மம்மி! எனக்கு உன்னிடம் பேசியாக வேண்டுமே'' என்று நான் அழுதேன்.

"அதெல்லாம் கூடாது. தூங்க வேண்டும். புரிகிறதா?'' என்று நான் அறிந்திராத கண்டிப்புடன் அவள் சொன்னாள்.

எனக்கு மிக நன்றாகவே புரிந்தது. எனக்குப் பேச வேண்டும். அவளுக்குத் தூங்க வேண்டும். மொத்தத்தில் அந்த வீடு யாருடையது?

நானும் அதே மாதிரி கண்டிப்புடன் சொன்னேன். "மம்மி! டாடி தனியாக வேறு படுக்கையில் படுப்பதுதான் ஆரோக்கியமானது என்று நான் நினைக்கிறேன்'' என்றேன்.

இது அவளைத் தடுமாறச் செய்திருக்க வேண்டும். ஏனென்றால், சற்று நேரத்துக்கு அவள் எதுவும் சொல்லவில்லை. அந்த அநீதி என்னை உறுத்தியது. முன்னுக்குப்பின் முரணாகவும், அநியாயமானதாகவும் இருந்த அவளுடைய வாய் வார்த்தைகளாலேயே நான் அவளைத் தண்டித்தேன். அவள் பதில் சொல்லக்கூட முயற்சி செய்யவில்லை. எரிச்சலுடன் நான் அப்பாவுக்கு ஒரு உதைவிட்டேன். அவள் அதைக் கவனிக்கவில்லை. ஆனால், அவர் முனகியபடி திடுக்கிட்டு கண் விழித்தார்.

அம்மாவைப் பார்க்காமல், யாரோ ஒருவரை உற்றுப் பார்ப்பவர் போல கதவைப் பார்த்துக்கொண்டே, நடுக்கம் தெரியும் குரலில், "மணி என்ன?'' என்றார்.

"இன்னும் நேரம் ஆகவில்லை. குழந்தைதான். நீங்கள் தூங்குங்கள்'' என்று அவள் ஆதரவாகச் சொன்னாள். பிறகு படுக்கையில் இருந்து எழுந்தபடி என்னைப் பார்த்து, "பார் லேறி. நீ டாடியை எழுப்பிவிட்டாய். நீ இப்போது உடனே வெளியே போயாக வேண்டும்'' என்று சொன்னாள்.

அமைதியாகச் சொன்ன போதிலும், அவள் இந்த முறை மிக உறுதியாக இருக்கிறாள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நான் போராடாமலிருந்துவிட்டால், என்னுடைய உரிமைகளையும் சலுகைகளையும் இழந்துவிடுவேன் என்பது தெரிந்தது. அவள் என்னைத் தூக்கியபோது, நான் அப்பாவைப் பற்றிக் கவலைப்படாமல், செத்துப் போனவர்கூட எழுந்துவிடும்படி பயங்கரமாக வீறிட்டலறினேன். அப்பா முனகினார்.

"கேடுகெட்ட பயல். அவன் தூங்குவதே இல்லையா?''

"அன்பே! அது அவன் வழக்கம்'' என்று அவள் அமைதியாகச் சொன்னபோதிலும், அவள் எரிச்சல் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் அறிய முடிந்தது.

"சரி, அவன் இங்கேயிருந்து இப்போது உடனே வெளியேற வேண்டும்'' என்று அப்பா கத்தினார். போர்வைகளை எல்லாம் சேர்த்துச் சுருட்டியபடி சுவர்ப்புறம் திரும்பிப் படுத்தார். சிறிய கன்னங்கரிய வெறுப்பு மிழும் இரண்டு கண்கள் மட்டும் தெரியும்படி தலையை மட்டும் திருப்பிப் பார்த்தார். மிக மோசமான மனிதராகத் தெரிந்தார்.

படுக்கை அறைக் கதவைத் திறப்பதற்காக அம்மா என்னை இறக்கி விட்டாள். உடனே, நான் என்னை விடுவித்துக் கொண்டு தூரத்து மூலைக்கு ஓட்டமாக ஓடிப்போய் வீறிட்டலறினேன். அப்பா எழுந்து படுக்கையில் உட்கார்ந்து கொண்டார்.

கரகரப்பான குரலில். "குட்டி நாயே! வாயை மூடு'' என்றார்.

நான், அதிர்ச்சி அடைந்து கத்துவதை நிறுத்தினேன். அப்படியான தொனியில் யாரும் எப்போதும் என்னிடம் பேசியதே இல்லை. ஆத்திரத்தில் கோணிய அவருடைய முகத்தை, நான் நம்ப முடியாதவனாகப் பார்த்தேன். இந்தப் பூதம் பத்திரமாகத் திரும்பி வரவேண்டும் என்று நான் செய்த பிரார்த்தனைகளுக்குப் பதிலாக கடவுள் எனக்கு என்ன கொடுத்திருக்கிறார் என்பதை நான் அப்போதுதான் நன்றாகப் புரிந்து கொண்டேன்.

"நீ வாயை மூடு'' என்று நான் அலறினேன்.

"என்ன சொன்னாய்?'' என்று படுக்கையைவிட்டுப் பாய்ந்து எழுந்தபடி அப்பா கத்தினார்.

"மிக், மிக், குழந்தைக்கும் உங்களுக்கும் இன்னும் நன்றாகப் பழக்கமாகவில்லை என்பது உங்களுக்கு தெரியவில்லையா?'' என்று அம்மா கத்தினாள்.

"நல்ல நடத்தையைவிட நல்ல தீனியே அவனுக்கு தரப்பட்டிருப்பது தெரிகிறது. முதுகில் இரண்டு அடி போட்டால் எல்லாம் சரியாகிவிடும்'' என்று கைகளைப் பயங்கரமாக ஆட்டிக் கொண்டு அவர் சொன்னார்.
இதுவரை அவர் போட்ட கூச்சல் எல்லாம், என்னைப் பற்றி அவர் இப்போது சொன்ன அசிங்கமான வார்த்தைகளுக்கு முன் ஒன்றுமில்லை என்றாகிவிட்டது. அவை என் ரத்தத்தைக் கொதிக்க வைத்தன.

"உன்னையே நீ அடித்துக்கொள். நீயே உன்னை அடித்துக்கொள். வாயை மூடு. உன் வாயை மூடு'' என்று வெறி பிடித்தவன் போலக் கத்தினேன்.

அவர், பொறுமை இழந்து என்னை அடிக்க வந்தார். அம்மா பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். தெளிவற்ற மனநிலையில் அவர் கொடுத்த அடியானது வெறுமனே லேசாகத் தட்டியதுபோல் இருந்தாலும், கள்ளமற்ற என்னுடைய பிரார்த்தனையின் விளைவாக யுத்தத்திலிருந்து வீடு திரும்பி, தந்திரமாக எங்கள் பெரிய படுக்கையில் இடம் பிடித்துக் கொண்டுவிட்ட அந்த அந்நியனிடம்&முற்றிலும் அந்நியமான ஒருவனிடம்&அடிவாங்குவது என்பது என்னைத் தடுமாறச் செய்தது. நான் அலறி அலறிக் கூச்சலிட்டபடி இங்கும் அங்கும் ஓடினேன். சின்ன மிலிட்டரி சட்டையை மட்டும் போட்டிருந்த அப்பா, உடலெங்கும் ரோமத்துடுன் அருவருப்பாகக் காட்சியளித்தபடி, கொலை செய்யக் கிளம்பிய மலைபோல என்னைக் குனிந்து பார்த்து முறைத்தார். அவருக்கு பொறாமையாகக்கூட இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. எங்கள் இருவருக்கும் நடுவே, அம்மா மனம் நொறுங்கிப் போனவளாக, நைட் டிரஸில் நின்றாள். அவள் மனம் சங்கடப்பட்டால் பரவாயில்லை என்றே எனக்குத் தோன்றியது. அவளுக்கு அவ்வளவும் தேவைதான் என்றுகூடப் பட்டது.

அன்று காலை முதல் என் வாழ்க்கை நரகமானது. அப்பாவும் நானும் பரம விரோதிகளாகிவிட்டோம். நான் அம்மாவுடன் இருக்கும் நேரத்தை அவரும, அவர் இருக்கும் நேரத்தை நானும பறித்துக் கொள்வதில் பல பூசல்களில் ஈடுபட்டோம். அம்மா, என் படுக்கையில் உட்கார்ந்து கதை சொல்லும்போது, அவர் யுத்தத்துக்கு போவதற்கு முன்னால் வைத்துவிட்டுப் போன பூட்சுகளை தேடத் தொடங்குவார். அவர் அம்மாவுடன் பேசும்போது அதை நான் கண்டு கொள்ளவில்லை என்று காட்டுவதற்காகவே என் விளையாட்டுச் சாமான்களை வைத்துக் கொண்டு சத்தம் போட்டு விளையாடுவேன். ஒருநாள் மாலை அவர் வேலை முடித்து வீடு திரும்பியதும் அவருடைய பெட்டியிலிருந்த பேட்ஜ்களையும், கூர்க்கா கத்திகளையும், மடக்குத் தடிகளையும் வைத்துக் கொண்டு, நான் விளையாடுவதைப் பார்த்துவிட்டுப் பயங்கரமாகச் சண்டை போட்டார், அம்மா எழுந்து வந்து அந்தப் பெட்டியை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போனாள்.

"லேறி! டாடியாகத் தராதபோது, நீ அவருடைய விளையாட்டுப் பொருட்களை எடுத்து விளையாடக்கூடாது அவர் உன் விளையாட்டுப் பொருட்களைத் தொடுவதில்லை அல்லவா?'' என்று கடுமையாகச் சொன்னாள்.
அவள், தன்னை அடித்து விட்டதுபோல ஏனோ அப்பா அவளைப் பார்த்து முகத்தை சுளித்துவிட்டு வேறுபுறம் திருப்பிக் கொண்டார்.

"அவை ஒன்றும் விளையாட்டுப் பொருட்களல்ல. அவற்றில் சில மிக அபூர்வமானவை; கிடைப்பதற்கரியவை'' என்று உறுமியபடி, அவர், பெட்டியை எடுத்து, அதற்கு உள்ளே இருந்து நான் எதையாவது எடுத்துக் கொண்டு விட்டேனோ என்று சோதனை போட்டார்.

ஆனால், காலம் செல்லச் செல்ல, அவர் என்னையும் அம்மாவையும் பிரித்து வைப்பதற்கு என்னென்ன செய்தார் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

அம்மாவுக்கு, அவர் மேல் அத்தனை ஈர்ப்பு வரும்படி அவர் என்ன செய்கிறார் என்பதை என்னால் தெரிந்துகொள்ள முடியாதது மோசமான நிலையாயிற்று. அவர் எல்லா விதத்திலும் என்னைவிட மட்டமாகத்தான் இருந்தார். சாதாரணமாகத்தான் பேசினார். டீ குடிக்கும்போது சப்தம் எழுப்பினார். ஒரு சமயம் அவளுக்கு செய்தித்தாளில்தான் ஆர்வமோ என்று எண்ணிக் கொண்டு நானாக துணுக்குச் செய்திகளைத் திரட்டி துண்டுத் தாளில் எழுதி அவளுக்குப் படித்துக் காட்டினேன். அப்புறம், ஒருவேளை அவர் புகைபிடிப்பதனாலோ என்று நினைத்துக் கொண்டேன். தனிப்பட்ட முறையில் எனக்கும் அது பிடித்திருந்தது. அவரிடம் பிடிபடும்வரை அவருடைய பைப்பை எடுத்துக் கொண்டு திரிந்தேன். டீயைக்கூட சப்தம் எழுப்பியபடி குடித்தேன். அம்மா, என்னிடம் மட்டும, "அது அருவருப்பாயிருக்கிறது' என்றாள். ஆகவே, ஒன்றாகத் தூங்கும் ஆரோக்கியமற்ற அந்த வழக்கத்தில்தான் ஏதோ மர்மம் இருக்கிறது என்று உணர்ந்தேன். அதைப் புலனாய்ந்து அறிவதற்காக அவர்களுடைய படுக்கையறைக்குள் நுழைந்து, அவர்களைக் கண்டுகொள்ளாதது போல எனக்கு நானே பேசிக்கொண்டு அவர்களைக் கண்காணித்தேன். எனக்குத் தெரிந்தவரை ஏதும் நடக்கவில்லை. பெரியவர்களாக வளர்ந்து மோதிரம் மாற்றிக் கொள்வதில் விஷயம் முழுவதும் அடங்கியிருந்ததாகத் தெரிந்தது. நான் காத்திருக்க வேண்டும் என்பதும் புரிந்தது.

அதே வேளையில், நான், காத்துக் கொண்டிருக்கிறேனே தவிர, சரண் அடைந்து விடவில்லை என்று அவருக்குத் தெரிவிக்க விரும்பினேன். ஒருநாள் என் முன்னால் அம்மாவுடன் சகித்துக்கொள்ள முடியாதபடி அவர் அரட்டையடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு நன்றாகக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

"மம்மி! நான் வளர்ந்து பெரியவன் ஆனதும் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?'' என்றேன்.

"இல்லை கண்ணே, என்ன?'' என்றாள் அவள்.

"நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்'' என்றேன் அமைதியாக.

அப்பா, அட்டகாசமாகச் சிரித்துவிட்டு அமைதியானார்.

அது வெறும் நடிப்புத்தான் என்று எனக்குத் தெரியும். அம்மா சந்தோஷப்பட்டாள். ஒரு காலத்தில், அப்பாவின் பிடியிலிருந்து, தான் தப்பித்துக் கொள்ள முடியும் என்ற எண்ணம் அவளுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்க வேண்டும். புன்னகை செய்தபடி, "அது நன்றாகத்தான் இருக்கும் இல்லையா?'' என்றாள்.

"ரொம்ப அருமையாக இருக்கும். ஏனென்றால், நமக்கு ஏகப்பட்ட குழந்தைகள் பிறக்கப் போகின்றன'' என்றேன்.

"அது சரி கண்ணே. விரைவில் நம் வீட்டுக்கு ஒரு குழந்தை கிடைக்கப் போகிறது என்று நினைக்கிறேன்.
பிறகு உனக்கு விளையாடத் துணை கிடைக்கும்'' என்று அவள் இனிமையாகச் சொன்னாள்.

அப்பாவின் விருப்பப்படி எல்லாம் நடப்பது போல அவள் காட்டிக் கொண்டாலும் என் ஆசைகளையும் அவள் மதித்தாள் என்பதை அறிந்து எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தவிர, ஜீனிஸ் வீட்டாருக்கும் பாடம் புகட்டியது போல இருக்கும்.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. முதலாவது அம்மா எப்போதும் வேலையாயிருந்தாள்.

ஆகப்போகிற அதிகச் செலவை அவள் எப்படி சமாளிக்கப் போகிறாளோ என்றிருந்தது எனக்கு. அப்பா மாலை நேரத்தில் வீடு திரும்புவதற்கு தாமதம் ஆனாலும் அதனால் எனக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. என்னை வெளியே அழைத்துப் போவதை அம்மா நிறுத்திவிட்டாள் எடுத்ததெற்கெல்லாம் அடித்தாள். நெருப்பாகக் கனன்றாள். குழந்தையைப் பற்றிய பேச்சை நான் எடுத்திருக்கவே கூடாது என்று நினைத்தேன். என்னுடைய அழிவை நானே தேடிக் கொள்வது வழக்கமாகிவிட்டது.

உண்மையிலேயே அழிவு காலம்தான். ஏராளமான ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே குழந்தை பிறந்தது. அலட்டிக் கொள்ளாமல் எதையும் அவன் செய்வதே இல்லை. முதல் கணத்திலிருந்து எனக்கு அவனைப் பிடிக்கவில்லை.

அவன் சிக்கலான குழந்தை. என்னைப் பொறுத்த அளவில் அவன் சிக்கலாகவே இருந்தான். எப்போதும் எல்லோர் கவனத்தையும் கோரியபடி இருந்தான்.

அவனைப் பொறுத்த அளவில், அம்மா, முட்டாளாக நடந்து கொண்டாள். அவன் எப்போதும் வேண்டுமென்றே பண்ணிக் கொள்கிறான் என்பதை அவளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

அவன் விளையாட்டுக்குத் துணை வர முடியாத உதவாக்கரையாக இருந்தான். நாள் முழுவதும் தூங்கிக் கொண்டே இருந்தான். அவனை எழுப்பி விடக்கூடாது என்பதற்காக நான் பதுங்கிப் பதுங்கி நடக்க வேண்டியதாக இருந்தது. அப்பாவை எழுப்பி விடுவது இப்போது பிரச்னையாக இல்லை. "குட்டியை எழுப்பி விடாதே' என்பதே வீட்டில் எப்போதும் கேட்கும் கோஷமானது.

ஏன் சரியாகக் குறிப்பிட்ட வேளையில் குழந்தை தூங்கக் கூடாது என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, அம்மா அந்தப் பக்கம் திரும்பியதும் நான் அவனை எழுப்பிவிட்டு விடுவேன். சில சமயங்களில், அவனை விழித்திருக்கச் செய்ய, நான், அவனை நன்றாகக் கிள்ளியும் விடுவேன். அம்மா, ஒரு நாள் என்னைக் கையும் களவுமாகப் பிடித்து ஈவிரக்கம் இல்லாமல் அடித்தாள்.

ஒருநாள் அப்பா வேலை முடிந்து வீடு திரும்பியபொழுது நான் முன்புறத் தோட்டத்தில் ரயில் வண்டி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தேன்.

அவரைக் கவனிக்காதது போல இருந்தபடி, எனக்கு நானே பேசிக் கொள்பவன்போல சத்தமாக, "இன்னொரு கேடு கெட்ட குழந்தை இந்த வீட்டுக்கு வந்தால் நான் எங்கேயாவது போய்விடப் போகிறேன்'' என்றேன்.
அப்பா அசைவில்லாமல் நின்று என்னைத் திரும்பிப் பார்த்தார்.

"என்ன சொன்னாய்?'' என்று கடுமையாகக் கேட்டார்.

என்னுடைய நடுக்கத்தை மறைத்துக் கொண்டு, "நான் எனக்குள்ளே ஏதோ பேசிக் கொண்டிருந்தேன். அது என் சொந்த ரகசியம்'' என்று நான் பதில் அளித்தேன்.

அவர் ஒரு வார்த்தையும் பேசாமல் திரும்பிப் போனார். ஒரு கடுமையான எச்சரிக்கையாக நான் விடுத்த செய்தியின் விளைவு முற்றிலும் வேறாக இருந்தது.

அப்பா, என்னிடம் இனிமையாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். என்னால் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அம்மா, குட்டியைப் பற்றி மிகவும் அலட்டிக் கொண்டாள். சாப்பாட்டு வேளையில்கூட அவள் மருண்டவளாக எழுந்து போய் தொட்டிலில் இருந்த குழந்தையைப் பார்த்து, முட்டாள்தனமாகப் புன்னகை செய்து, அப்பாவையும் அதே போலச் செய்யச் சொல்வாள்.

அவர், குட்டியிடம் நல்லதனமாக நடந்து கொள்பவர் என்றாலும், சில சமயங்களில் அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியாமல் குழம்புவார். இரவுகளில் குட்டி அழுவதைப் பற்றி அப்பா புகார் செய்தார். உடனே, அம்மா கோபித்துக் கொண்டு, ஏதாவது விஷயம் இல்லை என்றால் அவன் அழுவதே இல்லை என்கிற அண்டப் புளுகைச் சொன்னாள். அவள் எவ்வளவு தூரத்துக்கு விவரம் இல்லாமல் இருக்கிறாள் என்பதை நினைத்தால், உண்மையாகவே எனக்கு வருத்தமாக இருந்தது. அப்பா கவர்ச்சியானவர் இல்லை. ஆனால், கூர்மையான புத்தி உடையவர். அவர் குட்டியைப் புரிந்து கொண்டார். நானும் அவரைப் புரிந்துகொண்டேன் என்பதையும் உணர்ந்துகொண்டார்.

ஒரு இரவு நான் திடுக்கிட்டு எழுந்தேன். படுக்கையில் என் பக்கத்தில் யாரோ இருந்தார்கள். அம்மாவாக இருக்குமோ? சுயபுத்தி வரப்பெற்று நல்ல காலமாக அப்பாவை விட்டுவிட்டு என்னிடம் வந்துவிட்டாளோ என்று ஒரு கணம் எனக்குத் தோன்றியது.

அடுத்தகணம், குட்டி, பக்கத்து அறையில் இருந்து அழுவதும் அம்ம் அவனை ஆசுவாசப் படுத்துவதும் கேட்டது. இது அப்பா. கண்களைத் திறந்தபடி பெருமூச்சு விட்டுக் கொண்டு வெறி கொண்டதுபோல அவர் படுத்திருந்தார்.

"நீயும் தூங்கவில்லையா?'' என்று உறுமினார்.

"அட! வா. கைகளை என்மேல் போட்டுக்கொண்டு தூங்கு. சரியா'' என்றேன்.

அவரும் ஒருவிதமாக அப்படியே செய்தார். எச்சரிக்கையோடு என்று நீங்கள் அதை விவரிப்பீர்கள். அவர் எலும்பும் தோலுமாக இருந்தார் என்றாலும் நான் மட்டும் தனியாகப் படுத்திருப்பதற்கு இது பரவாயில்லை.
கிறிஸ்துமஸின்போது அவர் தாமாகவே முன்வந்து உண்மையிலேயே அருமையான ஒரு ரயில் பொம்மையை எனக்கு வாங்கித் தந்தார்.
000

- "கடைத்தெருவின் ஞானி" தொகுப்பிலிருந்து

No comments: