Tuesday, May 11, 2004

உங்களுக்குள்ளே சில புதிர்கள் - 6 (கவனம்)



நாம ஒரு விஷயத்தைப் பார்க்கிறதுக்கும் கவனிக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குது. எப்பவாவது கவனிச்சிருக்கீங்களா?

கவனம் என்பதன் அடிப்படையே புலனுறுப்புகள் மூலமாக வரும் செய்திகளை வடிகட்டும் செயல்தான்.

இப்பொழுது வண்டியோட்டிக் கொண்டு போகிறீர்கள். உங்கள் கவனம் சாலையில்தான் இருக்கும். சாலையில் மட்டும்தான் என்று உங்களால் சொல்ல முடியுமா? பின்னால் வரும் வண்டியைப் பார்க்க ரியர்வியூ மிரர் மீது கவனம் மாறும். பின்னால் வரும் வண்டியின் சத்தத்தை வைத்து அது வரும் வேகத்தைப் புரிந்து கொள்ள முடியும். உரசிக் கொண்டு போகும் வண்டிகளுக்கு டாட்டா காட்டிவிட்டு மிக ஜாக்கிரதையாகப் போய்க் கொண்டிருக்கிறீர்கள்.

இதெல்லாம் விட முக்கியமான இன்னொரு விஷயம் டிரா·பிக் போலிஸ். அவர் எங்கே இருக்கிறார்? இருக்கிறாரா இல்லையா? ரோடு காலியாகத்தானே இருக்கிறது. நில் என்று எச்சரிக்கும் சிவப்பு சமிக்ஞையை புறந்தள்ளிவிட்டுப் போய்விடலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே குறுக்கே வரும் ஒரு சைக்கிள்காரன் மீது வண்டி லேசாக மோதி இடித்து நின்றுவிட, அப்போது சரியாக வந்துவிடுவார் போலிஸ்காரர். அதுவரை எங்கே இருந்தார் என்று யாருக்கும் தெரியாது. இதற்காகவே காத்திருந்தது போல வந்து வண்டியை ஓரம்கட்டச் சொல்லுவார்.

சரி, அப்போது நீங்கள் யார் மீது குற்றம் சொல்வீர்கள். அந்த சைக்கிள்காரன் மீதுதானே. ரொம்பச் சரி. அப்புறம் வருவோம் இதே விஷயத்துக்கு.

கவனம் என்பது ஒரு முக்கியமான விஷயம். நாம் ஒரு சமயம் ஒரு விஷயத்தின் மீது மட்டுமே முழுதாக கவனம் செலுத்தமுடியும். ஒரு சமயம் ஒரு தூண்டலைத்தான் முழுமையாக கவனிக்க முடியும். இவ்வாறு பல தூண்டல்களிலிருந்து ஒரே ஒரு தூண்டலை மட்டுமே தேர்ந்தெடுத்து அதன் மீது அதிக அக்கறை செலுத்தி ஆய்வு செய்தலே கவனம் என்று சொல்லப்படுகிறது. (இதை நம்ம உளவியலாளர்கள் புலனாய்வு செய்தல் என்று சொல்கிறார்கள்)

இரண்டு செய்திகளை ஒரே நேரத்தில் கவனிக்க முடியாது. ஒரு விஷயம் மட்டுமே கவனிக்கப்படும். மற்றொன்று புறக்கணிக்கப்படும்.

இந்த கவனத்திற்கு இரண்டு விதமான காரணிகள் உண்டு. அவை, புறவயக் காரணிகள் மற்றும் அகவயக் காரணிகள்

புறவயக் காரணிகள் என்று சொல்லப்படுவன செறிவு அல்லது அளவு, புதுமை அல்லது வேற்றுமை, செய்ததே செய்தல், அசைவு அகவயக் காரணிகள் என்று சொல்லப்படுபவை பசி; தாகம்; பாலுணர்வு, இரண்டாவதாகத் தயார் நிலை, மூன்றாவதாக ஆர்வம், முன் அனுபவம், புலன்காட்சி முனைவு ஆகியன.

புறவயக் காரணிகள் என்று சொல்லப்படுபவை பெரும்பாலும் மக்களை ஈர்ப்பதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. விளம்பரத் துறையினரால் மட்டுமே பயன்படுத்தப்படுபவை புறவயக் காரணிகள். மக்களின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமே அவர்களின் வேலையாக இருப்பதனால் புறவயக் காரணிகள் மூலம் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

அகவயக் காரணிகள் இருக்கிறதே அதுதான் மிகவும் சக்திவாய்ந்தது. மனிதர்களை மொத்தமாகப் புரட்டிப் போட்டுவிடக்கூடியது. மிக எளிதாக கவனக்குலைவு ஏற்படுவது முதலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பசி; தாகம்; பாலுணர்வு போன்ற அகவயக் கூறுகளால்தான்.

அடுத்ததாகச் சொல்லப்பட்ட தயார் நிலை இருக்கிறதே. இது ஒரு சிக்னலுக்காகக் காத்திருத்தல் போன்றது. துப்பாக்கி வெடித்ததும் சீறிப்பாயும் ஒட்டப்பந்தயக்காரனைப் போல. குழந்தை அழும் குரலைக் கேட்டவுடன் பாலூட்டத் தொடங்கும் தாயின் விழிப்பு நிலை போன்றது.

மூன்றாவதாகச் சொல்லப்பட்ட விஷயம் ஆர்வம். நீங்களும் உங்கள் நண்பரும் ஒரு புத்தகக் கண்காட்சியின் உள்ளே போய்க் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இலக்கியம் பிடிக்கும். உங்கள் நண்பருக்கு கம்ப்யூட்டர் மட்டுமே பிடிக்கும். இருவருமாக சுற்றி வரும்போது இருவரின் கவனமும் மாறுபடும். நீங்கள் இலக்கியப் புத்தகங்கள் முன்பு நின்று தேட ஆரம்பித்துவிடுவீர்கள். உங்கள் நண்பர் உங்களுடன் வந்ததையே மறந்து எதிர் வரிசையில் கம்ப்யூட்டர் புத்தகங்களில் மேய்ந்து கொண்டிருப்பார். இந்த கவனம் ஆர்வத்தினால் வருவது. உங்களை அதிகம் ஈர்க்கக்கூடியதாக இருக்கிறதோ அதன் மீதே நீங்கள் கவனம் செலுத்துவீர்கள்.

முன் அனுபவம் என்பது உங்களிடம் இருக்கும் முன் அனுபவத்தைக் கொண்டு நீங்கள் செலுத்தும் கவனம்.

கடைசியாக புலன் காட்சி முனைவு என்று சொல்லப்படுவதும் தயார் நிலையே.

சரி, வண்டி அந்த சைக்கிள்காரனை இடித்துத் தள்ளியபோது உங்கள் கவனம் எங்கேயிருந்தது? வண்டியைச் சரியாகத்தான் ஓட்டிக் கொண்டு வந்தீர்கள். சிக்னலையும் பார்த்துவிட்டீர்கள். இதில் உங்கள் கவனத்தில் குறுக்கிட்டது அந்தப் போலிஸ்காரரின் நினைப்புத்தான். போலிஸ்காரரின் நினைப்பு மட்டுமா? இல்லை. சிக்னலும்தான். சிக்னலைப் புறக்கணிக்கும் உங்கள் அவசரமும்தான். இதெல்லாம் உங்கள் கவனத்தைக் குலைத்துவிடுகின்றன.

இத்தனைக்கும் நடுவே நீங்கள் சைக்கிள்காரனை கவனிக்க முடியாமல் போய்விட்டது. அவ்வளவுதான். வேறொன்றுமில்லை. அதற்கு கவனப் பகுப்பு என்று சொல்லுவார்கள்.

சில சமயங்களில் இரண்டிற்கும் மேற்பட்ட விஷயங்களில் நாம் கவனம் செலுத்த முற்படும்போது நம் கவனம் குறித்த நேரத்தில் ஒரே ஒரு வடிவத்தில் மட்டுமே அல்லது செயலில் மட்டுமே இருக்கும். கவனப் பிளவு என ஒரு சங்கதி உண்டு. அது ஒரே நேரத்தில் இரண்டு தனித்தனி வேலைகளைச் செய்வதாகும். அதாவது, நண்பர்களுடன் பேசிக் கொண்டே ரோட்டில் நடந்து போகும்போது புகைபிடித்துக் கொண்டு, சுற்றிலும் பார்த்துக் கொண்டு, கைத்தடி இருப்பின் அதைச் சுற்ரிக் கொண்டு போக முடிகிறதே. இது ஒரே சமயத்தில் இரண்டு வேலைகள் செய்வதுதானே? எப்படி முடியும் இது?

மிகுந்த கவனம் இந்த வாரத் தமிழோவியத்தில்

No comments: