Saturday, February 14, 2009

ஏழாம் உலகமும் நான் கடவுளும்


‘நான் கடவுள்’ இரண்டு கதை. பிச்சைக்காரர்கள் உலகம். சாமியார் உலகம். இரண்டையும் சரிசமமாக நிறுத்த முயற்சித்திருக்கும் ஒரு முயற்சியே இத்திரைப்படம். ‘ஏழாம் உலகம்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ஆனால், நாவலின் உக்கிரமோ, அருவறுப்புகளோ இல்லாமல் படம் எடுக்கப்பட்டிருப்பது சிறப்பு.

நாவல் காட்டும் உலகம் வேறு. திரைப்படம் காட்டும் உலகம் வேறு. இருவேரு படைப்புகளும் அதனதன் அளவில் சிறப்பாக இருந்தாலும், நாவலில் இருந்து திரைப்படமாக்கும் வித்தை சரியாகக் கனிந்து வரவில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

நாவல் காட்டும் உலகம் மிகவும் ஆழமானது. பிரம்மாண்டமானதும் கூட. முக்கியமாக நாவலுக்கும் திரைப்படத்துக்கும் உள்ள மிகப் பெரும் வித்தியாசம் நாவல் பிச்சைக்காரர்களால் ஆனது. திரைப்படம் கடவுளைத் தேடும் சாமியார்களால் ஆனது. நாவலை அப்படியே திரைப்படமாக்கும் முயற்சியைச் செய்யாமல், கூடுதலாக அதன் இன்னொரு பரிமாணமான சாமியார்களின் உலகத்தோடு அதை ஒப்பிட்டிருப்பது சிறப்பானது.

நாவலில் வரும் பிச்சைக்காரன் ஒருவன் சொல்லும் டயலாக்: அலகு குத்திக் கொண்டு, முகம் முழுவதும் மஞ்சள் அப்பிக் கொண்டு பழனி மலை முருகனை தரிசிக்க மேலே செல்லும் பக்தர் கூட்டத்தைப் பார்த்து ஒரு பிச்சைக்காரன் சொல்வான். “நாம இவனுகள்ட்ட பிச்ச எடுக்கம். இவுனுக அங்க மேல உள்ள பிச்சைக்கார ஆண்டிக்கிட்ட பிச்ச எடுக்கானுக.”



பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை அப்படியே நாவலில் இருப்பது போல படமாக்காமல் இருந்ததற்கு முக்கிய காரணம், பாலா ஆவணப்படமாக எடுக்க விரும்பவில்லை என்பதுதான். அதனை ஈடுகட்டும் வகையில் சாமியார்கள் திணிக்கப்பட்டதுதான் கடவுள். ‘நான் கடவுள்’ பிச்சை எடுக்கும் உருப்படிகளை வாங்கி விற்று பிச்சை எடுப்பவர்களின் பணத்தை மொத்தமாக அண்டாவில் வாரிச் சுருட்டிக் கொண்டு போகும் சிலர் பழிவாங்கப்பட வேண்டும். அதற்கு ஒருவன் வருவான். அவன்தான் கடவுள். இதே விஷயம் நாவலில் வேறு வகையில் கையாளப்பட்டிருக்கிறது. கடவுள் என்ற பிம்பமே கேலிக்குரியதாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது.

‘ஏழாம் உலகம்’ ஜெயமோகனின் வழக்கமான நாவல் வடிவத்திலிருந்து மாறுபட்டது. எடுத்துக் கொண்ட களம் பற்றிய விவரணை ஏதும் இல்லாமலே நாவல் தொடர்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் கதாபாத்திரங்களின் பேச்சுக்களாலும், சின்னச் சின்ன சம்பவங்களாலும் நாவல் தனது வடிவத்தைக் கண்டடைகிறது. நாவல் படிப்பதே ஒரு திரைப்படம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது. நாவலில் உள்ள சில வசனங்கள் படத்திலும் இருக்கிறது. குறிப்பாக ‘அம்மா... மகாலட்சுமி... பிச்சை போடுங்கம்மா... ஏ... ஜோதிலட்சுமி...’

நாவலில் இருக்கும் குரூரமும் நாற்றமடிக்கும் அவர்களின் வாழ்க்கை முறையும், அதனை ஒரு பிழைப்பாகக் கொண்டு உருப்படிகளை விற்று வாங்கி பிச்சை எடுக்க வைப்பனின் நாறிப் போன வாழ்க்கையையும் அப்படியே பதிவு செய்யாமல் விட்டதற்காக நான் கடவுளை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.



பிச்சை எடுப்பதற்காகவே குறைப்பிறவியாகப் பிறக்க வேண்டும் என்று ஒரு கூனனையும், கை கால் சூம்பி, மண்டை சப்பிப் போன ஒற்றைக் கண்ணோடு இருக்கும் ஒருத்தியுடன் அணைய விடும் பண்டாரத்தைப் பார்த்து நாம் அதிர்ந்து நிற்க, பண்டாரமே அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் ஓர் இடமும் உண்டு. சிறுவர்களைப் பிடித்து வந்து நாக்கறுத்து, அமிலம் ஊற்றி வெந்து போன முகமாக உருத் தெரியாமல் உருக்கி அழித்து, கண் குத்தி, ‘பெத்த அம்மா பாத்தாக்கூட சந்தேகப்படமாட்டா. அப்டி மாத்திருக்கோம்’ என்று சொல்லும் ஓர் இடத்திலிருந்து அதிர்ந்து போய் ஓடுகிறார் பண்டாரம். தன்னுடைய தொழிலைவிட மிகவும் மோசமான ஒரு விஷயத்தைக் கண்டவர் வீடு சேரும்போது தன் இடுப்பில் வைத்திருந்த பணத்தை எவ்வளவு என்றெல்லாம் எண்ணிப் பார்க்காமல் அப்படியே கோயில் உண்டியலில் திணிக்கிறார். ஆயிரத்து இருநூறு இருக்கும். இல்லை மேலேயா...

தனது மகளின் கல்யாணத்துக்காக உருப்படிகளை விற்கும் பண்டாரம், தன்னுடைய ஐசுவரியம் என்று சொல்லும் மாங்காண்டி சாமியாரை விற்கச் சம்மதமில்லாமல் ‘அது எனக்க ஐஸரியமாக்கும்’ என்று சொல்லச் சொல்ல மாங்காண்டி சாமியின் விலை ஏறுகிறது. பத்தாயிரத்தில் ஆரம்பிக்கும் பேரம் அறுபதாயிரத்தில் முடிகிறது. அதே மாங்காண்டி சாமியை சில காலம் கழித்து பத்தாயிரம் ரூபாய்க்கு தானே வாங்கிக் கொள்ளும் இடத்தில் பண்டாரம் ஒரு நல்ல வியாபாரி.
நாவலில் இவர்கள் பேசும் நாகர்கோயில் கன்னியாகுமரித் தமிழ், திரைப்படமாகும்போது கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆர்யா வரும்போதெல்லாம் என்ன மொழியில் பேசப் போகிறாரோ என்று கவனிக்க வேண்டியிருந்தது.

படத்தில் மிகவும் சிறப்பாக அமைந்த விஷயங்கள் இளையராஜாவின் இசை, ஆர்தர் வில்சனின் கேமரா, பூஜாவின் நடிப்பு.

இப்படிப்பட்ட மக்களின் வாழ்க்கையை நாவலாக்கியதற்காக ஜெயமோகனுக்கும், அதைத் திரைப்படத்தின் வழியாகப் பல கோடி பேருக்குக் கொண்டு சேர்த்த பாலாவுக்கும் நன்றியைச் சொல்லலாம். மத்தபடி இந்த அகோரி, சாமியார் இதெல்லாம் என்னமோ சொல்றாங்களே... அதுக்கெல்லாம் ஏதாவது படம் எடுத்திருக்காங்களா? யாராவது சொல்லுங்க.

4 comments:

Senthil said...

me the firstuu?

Great post

Senthil, bahrain

Anonymous said...

hello sir,
all the best,we are expecting more from u.

Anonymous said...

ஏழாம் உலகம் நாவலிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பது நன்றாக இருக்கிறது.

“நாம இவனுகள்ட்ட பிச்ச எடுக்கம். இவுனுக அங்க மேல உள்ள பிச்சைக்கார ஆண்டிக்கிட்ட பிச்ச எடுக்கானுக.”

:)

கருப்புசாமிகுத்தகைதாரர் said...

நல்ல மதிப்புரை.