Saturday, May 22, 2004

உங்களுக்குள்ளே சில புதிர்கள் - 8 (ஊக்கம்)

ஊக்குவித்தல் என்ற பெயரே லத்தீன் மொழியிலிருந்து வந்ததுதான். லத்தீன் மொழியில் அடைதல் என்னும் பொருளைக் கொண்ட ஒரு சொல்லிலிருந்து கிடைத்த வார்த்தைதான் ஊக்குவித்தல். ஒருவரை ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்பட கட்டாயப்படுத்தும் ஒருவகை உந்துசக்தியே ஊக்குவித்தல்.

ஒருவருடைய ஆர்வத்தைத் தூண்டி அவருடைய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி முழு மூச்சுடன் செயல்படுத்தத் தூண்டுவதே ஊக்குவித்தல் எனப்படுகிறது. மனிதனின் உள்ளார்ந்த தேவைகள், விருப்பங்கள், ஆசைகள் மற்றும் துடிப்புகள் ஆகியன ஊக்கிகள் எனப்படுகின்றன.

சரி, ஊக்கம் அப்படின்னா என்ன?

ஒரு குறிக்கோளை நோக்கி உங்களை இயங்கச் செய்வதுதான் ஊக்கம்.

"கிளாஸ்ல நீ ·பர்ஸ்ட் ரேங்க் வாங்கு. நீ ஆசைப்பட்ட மாதிரியே உனக்கு நான் ஒரு சைக்கிள் வாங்கித் தருகிறேன்" என்று அப்பா சொல்லியிருப்பாரே, இது ஊக்கம்.

"இந்த மாசம் 150 கம்ப்யூட்டர் ஆர்டர் கொண்டு வா, உனக்கு ஐந்தாயிரம் ரூபாய் இன்செண்டிவ் தருகிறேன்." என்று மேனேஜர் சொல்லியிருப்பாரே, இதுவும் ஊக்கம்.

அதாவது நீங்கள் முதல் ரேங்க் வாங்கவேண்டும் என்னும் நோக்கத்தை உங்கள் ஆசிரியர் ஊக்குவிக்கிறார். அதிகமான அளவில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்னும் எண்ணத்தை உங்கள் மேனேஜர் ஊக்குவிக்கிறர். அதாவது உங்களை மகிழ்விப்பதன் மூலம் உங்கள் திறமைகளை ஊக்குவிக்கிறார்கள்.

சரியாகச் சொன்னால் உங்கள் திறமைகளைக் கொண்டு குறிக்கோளை அடையும் செயலை அவர்கள் உற்சாகப்படுத்துகிறார்கள்.

இது மட்டும்தான் ஊக்கம் என்று சொல்ல முடியுமா?

"நாளைக்கு இந்த மனப்பாடப்பகுதியை மனப்பாடம் செஞ்சுட்டு வந்து ஒப்பிக்கணும், அப்படி ஒப்பிக்காதவங்க எல்லாரையும் கிளாஸ¤க்கு வெளில முட்டி போட வைப்பேன்" என்று தமிழ் வாத்தியார் சொல்லியிருப்பார்.

அதே மேனேஜர் இந்த மாசம் நீ 150 விக்கலைன்னா இந்த வருஷம் இன்க்ரிமெண்ட்டை கட் பண்ணிடுவேன்." என்று மிரட்டியிருப்பார்.

இதுவும் ஊக்கம்தான்.

இது எப்படி ஊக்கமாகும்?

வாத்தியார் சொன்னது போல அடுத்த நாள் மனப்பாடம் செய்து ஒப்பிக்காவிட்டால் கிளாஸ¤க்கு வெளியே முட்டி போடவேண்டியிருக்கும். அத்தனை மாணவ மாணவிகளின் முன்பும் முட்டி போட வேண்டும் என்ற பயத்தினால் நீங்கள் அந்த மனப்பாடப்பகுதியைப் படித்து முடிப்பீர்கள். ஆக, ஆசிரியரின் நோக்கம் நிறைவேறியது. நீங்கள் அந்த மனப்பாடப்பகுதியைப் படிக்கவேண்டும் என்பது அவர் நோக்கம். அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற அவர் கையாண்ட விதம் இந்த ஊக்கம்.

விற்பனை நிலைமையைச் சீரமைக்க உங்கள் மேனேஜர் நடந்து கொண்ட விதம். இதுவும் ஊக்கம்தான்.

இது எதிர்மறையான ஊக்கம்.

முதலில் சொல்லப்பட்டது வெகுமதி அல்லது பரிசினை அளிப்பது. இது உடன்பாடான ஊக்கம். இரண்டாவதாகச் சொல்லப்பட்டிருப்பது தண்டனை எனப்படும் எதிர்மறை ஊக்கியாகும்.

ஆனால், இரண்டுமே உங்களை குறிக்கோளை நோக்கிச் செலுத்தும் ஊக்கமாகும். இரண்டின் மூலமும் நீங்கள் உங்கள் குறிக்கோளை அடையமுடியும்.

இந்த ஊக்கம் என்பது உங்களுக்குள் ஏற்படும் ஒரு உந்து நிலையில்தான் ஆரம்பமாகின்றது. உந்து நிலையில் ஆரம்பித்து உங்களை குறிக்கோளை நோக்கிச் செலுத்துகிறது.

முதலில் சொல்லப்பட்ட வெகுமதி அல்லது பரிசு கொடுப்பதனால் தனிமனிதனின் ஒழுக்கம், நடத்தை, கற்றல் போன்றவை மேம்படுத்தப்படும்.

இரண்டாவதாக இருக்கும் தண்டனை என்னும் ஊக்கியினால் ஏற்படுவது பயம், அந்தஸ்து, தனிமனித கௌரவம் பாதித்தல் ஆகியவையே.

ஆக, இந்த இரண்டு ஊக்கிகளின் மூலமாகவும் உங்கள் குறிக்கோளை அடைய முடியும்.

இரண்டு விதங்களிலும் சில நிறைகள் இருக்கின்றன. சில குறைகள் இருக்கின்றன.

வெகுமதிகள் மற்றும் பரிசுகள் தருவது எப்போதும் மகிழ்ச்சியைத் தரும். பரிசு பெற்றவரை மேலும் ஆர்வத்தோடு செயல்பட ஊக்குவிக்கும். வெகுமதிகள் மகிழ்ச்சியைத் தருவதால் அக்கறை மற்றும் உற்சாகத்தைக் கொடுக்கும். வெகுமதிகள் திறமை வாய்ந்தவர்களை மேலும் முன்னேற்றம் அடையச் செய்யும். ஆனால், வெகுமதிகள் எல்லோரையும் ஊக்குவிப்பதில்லை. சமதிறமை உள்ளவர்களை மட்டுமே ஊக்குவிக்கின்றன. வெகுமதிகள் கிடைக்காதபோது ஏமாற்றத்தை அளிக்கும். வெகுமதிகள் பெரும்பாலும் சுமூகமான போட்டியை உண்டாக்குவதில்லை.

தண்டனைகள், எப்போதும் வருத்தத்தோடும் வலியோடும் இணைந்திருப்பதால் தவறு செய்வது மிகவும் குறையும். தண்டனை பெறுபவர்கள் நடத்தையை மட்டுமின்றி மற்றவர்களின் நடத்தையையும் கட்டுப்படுத்துகின்றன. விரும்பத்தகாத நடத்தைகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் நல்ல பலனைத் தரும்.

ஆனால், இந்த தண்டனை என்னும் ஊக்கியின் மூலம் குறிக்கோளை அடைவதை நாம் தவிர்க்க வேண்டும். தண்டனைகள் அளிப்பதன் மூலம் மகிழ்ச்சியற்ற உணர்வை உண்டாக்குவதோடு தோல்வியோடும் இணைக்கப்பட்டுள்ளன. தண்டனைகள் அளிப்பதன் மூலம் கிடைக்கும் முடிவுகள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தண்டனைகள் குறித்து பயப்படாமல் போகும் பட்சத்தில் அல்லது தண்டனைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு வந்துவிட்டாலோ தண்டனைகள் வழங்குவதில் பலனில்லாமல் போய்விடும். தண்டனை வழங்கியவர்கள் மீதும், சமூகத்தின் மீதும் மனவருத்தத்தை அளிக்கும்.

சரி, இந்த இரண்டு ஊக்கிகளில் எது சிறந்த பலனைத் தரும்?

இரண்டுமே பலனைத் தரலாம் அல்லது எதிர்பார்த்த பலனைத் தராமலும் போகலாம். காரணம் வெகுமதியோ தண்டனையோ, அதனை வழங்குபவரின் ஆளுமையும், அதனைப் பெறுவோரின் ஆளுமையையும் பொறுத்தே பலனைத் தரும்.

எப்படி கவனம் என்பது உங்கள் தேவைகளைக் கொண்டு அமைகிறதோ அதே போல ஊக்கமும் பெரும்பாலும் உங்கள் தேவைகளைக் கொண்டே அமைகிறது.

அடிப்படைத் தேவைகளையும் சமூக ஊக்கிகளையும் தமிழோவியத்தில் பார்க்கலாம்.

No comments: