Monday, October 06, 2008

இரண்டு பிஸினஸ்மேன்கள்


எல்லா பிஸினஸ்மேன்களும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் போல. சிறு வயதிலிருந்தே எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், தோல்விகள் வந்துவிடுமோ என்ற பயப்படாத குணம், தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் முன்னேறத் துடிக்கும் வெறி, அப்படியே தோல்விகளைச் சந்திக்க நேர்ந்தாலும் அத்தனையையும் துரத்தித் துரத்தி அடித்து துவம்சம் செய்து விரட்டி அடிக்கும் விடாமுயற்சி, தான் சாதிக்க நினைப்பதை சாதித்தே தீரவேண்டும் என்ற பிடிவாதம் - இவையெல்லாமே பிஸினஸ்மேன்களின் குணாம்சங்களாக இருக்கின்றன.

நேற்று ரிச்சர்ட் பிரான்ஸன் புத்தகத்தைப் படிக்கும்போது இவையெல்லாவற்றையுமே மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ள முடிந்தது. படித்துக் கொண்டிருக்கும்போதே வேறு ஒரு பிஸினஸ்மேனின் வாழ்க்கையும் குறுக்கே வந்து கொண்டே இருந்தது. அது ஹென்றி ஃபோர்ட்.


ஹென்றி போர்டை ஒரு கண்டுபிடிப்பாளராக மட்டும் பார்க்க முடியவில்லை. ஒரு வெற்றிகரமான வியாபாரியாகத்தான் பார்க்க முடிகிறது. ஹென்றி ஃபோர்டையும் ரிச்சர்ட் பிரான்ஸனையும் ஒப்பிடலாமா, என்று கேட்போருக்கு, இரண்டு பேரின் வாழ்க்கையிலிருந்தும் பல சம்பவங்களை எடுத்துக் காட்ட முடியும். இரண்டு பேரின் வாழ்க்கையிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள், அவற்றைச் சமாளிக்கும் விதம் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி.

ரிச்சர்ட் பிரான்ஸன் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதைச் சிறப்பான வகையில் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். வாடிக்கையாளர் திருப்தியே நமது வெற்றி என்பது ஃபோர்டின் சித்தாந்தம்.

இரண்டு பேரும் விளம்பர விஷயத்தில் மிகவும் நுணுக்கமாக விளையாடியிருக்கிறார்கள். விளம்பரமாக எதையும் கொடுக்காமல் நாள்தோறும் தம்மைப் பற்றிய செய்திகள் வரும்படி பார்த்துக் கொண்டவர்கள். தக்க சமயம் பார்த்து எதிரி நிறுவனங்களின் மேல் வழக்குப் போட்டு வெற்றி பெற்றவர்கள். இந்த வழக்கு விவரங்களையே தங்கள் விளம்பரமாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள்.

ஃபோர்டுக்கும் பிரான்ஸனுக்கும் வேறுபாடு என்று நினைத்தது ஒரே ஒரு விஷயத்தை மட்டும்தான். ஃபோர்டு எப்போதும் பழைமைவாதியாகவே இருந்திருக்கிறார். மாடல் ‘T’ என்ற தனது காரை மேலும் அதிக வசதியுள்ளதாக மாற்ற விரும்பி ஒரு காரை அவர் முன்னால் நிறுத்தினார்கள். மிகவும் ஆவேசமாக அந்தக் காரின் கதவுகளைப் பிய்த்தெறிந்து காரின் மேல் ஏறிக் குதித்துக் குதித்து நசுக்கியிருக்கிறார்.

‘மாடல் டி மட்டும்தான் ஃபோர்ட் கம்பெனியின் கார். யார் அதை மாற்ற நினைத்தாலும் அது அவருக்கு நல்லதல்ல. மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் வெளியேறிவிடலாம்’ என்று கத்தினார் ஃபோர்ட்.

பிரான்ஸன் அப்படியல்ல. எப்போதும் புதுப்புது விஷயங்களில் ஆர்வம் செலுத்தி இஷ்டத்துக்குப் பல நிறுவனங்களை ஆரம்பித்திருக்கிறார். அவற்றில் பல வெற்றிகளும் உண்டு. தோல்வி அடைந்தவையும் உண்டு.

பிரான்ஸனிடமும் ஒரே ஒரு பழைமைவாதம் இருந்தது. அது தன்னுடைய நோட்டுப் புத்தகம். தான் நடத்தும் விமானத்தில் ஏறி வாடிக்கையாளரின் அருகில் அமர்ந்து கொண்டு, இந்த விமான சேவை எப்படி இருக்கிறது? என்று கேட்டுக் குறிப்பெடுத்துக் கொள்பவர்.

நிறைய சம்பாதித்துவிட்டோம் என்று ஒரு கட்டத்தில் சலித்துப் போகும்போது - தான் இல்லாமலே இந்த நிறுவனம் இயங்கும் என்ற நிலை வரும்போது, தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் மனித சமூகத்தின் மேல் அக்கறை கொண்டு சமூக சேவை செய்ய வருவதும் பிஸினஸ்மேன்களின் இயல்பாக இருக்கிறது.

ரிச்சர்ட் பிரான்ஸன்: டோன்ட் கேர் மாஸ்டர் - இதுதான் புத்தகத்தின் பெயர். ரிச்சர்ட் பிரான்ஸனை எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. புத்தகத்தைப் படித்து முடிக்கும்போதுதான் ஒரு விஷயம் தெரிந்தது. சமீபமாக இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் வெர்ஜின் மொபைலுக்கும் அவருக்கும் ஏதோ தொடர்பு என்பது புரிந்தது. அந்த மொபைலின் தயாரிப்பு என்னவோ டாடா நிறுவனம்தான். பிராண்டின் பெயரை மட்டும் வைத்து இங்கே மார்க்கெட்டிங் செய்கிறார்கள்.

முதல் சில பக்கங்களிலேயே இது குறித்து வந்திருக்கலாம் என நினைக்கிறேன். ரிச்சர்ட் பிரான்ஸன் யார்? அவரைப் பற்றி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? என்பது போன்ற விவரங்கள் முதல் அத்தியாயத்திலோ அல்லது அதற்கும் முன்பாகவோ கொடுத்திருக்கலாம். சுவையான ஆரம்பம் இருந்தாலும், திரைப்படத்தில் வரும் கதாநாயகன் ஒருவனைப் போல் பிறந்தான், வளர்ந்தான், வியாபாரம் செய்தான், தோல்வி அடைந்தான். வெறி கொண்டான், வெற்றியின் உச்சத்தை அடைந்தான் என்று சொல்லி முடியும்போது இவர்தான் இந்தியாவில் வெர்ஜின் மொபைலை மார்க்கெட்டிங் செய்து வருகிறார் என்கிறது புத்தகம்.

பிரான்ஸனின் ஆரம்ப கால வாழ்க்கையிலிருந்து சமீபத்திய மொபைல் மார்க்கெட்டிங் வரை நிறையவே சுவாரஸ்யங்கள் உண்டு.

மாணவர்களுக்கான பத்திரிகையை ‘ஸ்டூடண்ட்’ என்ற பெயரில் நடத்தி வருகிறார். பத்திரிகை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகிறது. காசு கொடுத்து வாங்குவதை விட ஓசியில் படிப்பவர்களே அதிகமாக இருந்தார்கள். ‘பரவாயில்லை, என்னுடைய நோக்கம் இளைஞர்கள் விரும்பிப் படிக்கும் ஓர் இதழைக் கொண்டு வருவதுதான். அது நிறைவேறினாலே போதும்’ என்கிறார் பிரான்ஸன். பிரான்ஸானுக்கென்று ஒரு தனி வட்டம் உருவாகிறது.

இது நாளடைவில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஓர் இயக்கமாக மாறுகிறது. வருமானம் இல்லாமல் போனதும் ஸ்டூடண்ட் பத்திரிகையை விற்றுவிட நினைக்கிறார் பிரான்ஸன்.

அடுத்தது வேறு ஒரு பிஸினஸ் ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுக்கிறார். இப்படி ஒரு முடிவெடுக்கும்போது அவருக்கு வயது இருபதுக்கும் குறைவே.

பின்னர், இசைத்தட்டுகள் விற்பனை செய்கிறார். ரெக்கார்டிங் ஸ்டூடியோ கட்டுகிறார். அவரே புதிய இசைக் கலைஞர்களைக் கண்டெடுத்து இசைத்தட்டுகளை வெளியிடுகிறார். இசைத்தட்டு விற்பனையில் கொடி கட்டிப் பறக்கிறார். அடுத்ததாக விமானம் வாங்கி பல திசைகளுக்கும் ஓட்டுகிறார். ஆனால், அதில் நஷ்டம் என்று வரும்போது அதனை மூடிவிடாமல் வேறு ஒரு வழி செய்கிறார்.

ஏற்கெனவே லாபத்தில் போய்க் கொண்டிருக்கும் தமது இசைத்தட்டு விற்பனை நிறுவனத்தை அதிக லாபத்துக்கு விற்றுவிட்டு, நஷ்டத்தில் போய்க் கொண்டிருக்கும் கம்பெனியைத் தூக்கி நிறுத்தப் பார்க்கிறார். முழுக் கவனத்தோடு செயல்பட்டு அதில் ஜெயித்தும் காட்டுகிறார்.

ஒவ்வொரு துறையையும் எடுத்துக் கொண்டு அதில் மிகவும் கவனமாக உழைத்து இன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 2008-ம் ஆண்டின் உலகப் பணக்காரர்கள் வரிசையில் 236-வது இடத்தில் இருக்கிறார்.

236-வது இடத்தில் இருக்கும் ஒரு வியாபாரியின் வாழ்க்கையே இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறதென்றால் முதல் சில இடங்களுக்குள் இருப்பவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

3 comments:

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

"" 236-வது இடத்தில் இருக்கும் ஒரு வியாபாரியின் வாழ்க்கையே இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறதென்றால் முதல் சில இடங்களுக்குள் இருப்பவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்""

ஆமாண்ணே, இதெல்லாம் ஒரு பாடமா எடுத்துகிட்டு நாமளும் அடிச்சி தூக்கனும்...

என்ன சொல்றீங்க...

Anonymous said...

good one. interesting and informative. Expecting more write up on this line..

நவநீதன் said...

எளிமையான நடையில் நிறைய தகவல்களோடு அழகாக எழுதியிருக்கிறீர்கள்.