Thursday, November 24, 2005

ரஜினியின் கால்பந்தாட்டம்

சினிமாவில் வரும் பாடல்களில் கேட்க வேண்டிய பாடல், பார்க்க வேண்டிய பாடல் என்று
இரண்டு இருப்பதாக நான் நினைக்கிறேன். இரண்டும் அவரவர் மனநிலையைப் பொருத்ததே.
மிகவும் அபூர்வமாகவே இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து அமையும். அப்படி அமைந்த பாடல்கள்
மிகவும் குறைவு என்று சொல்லலாம்.

"குறைவு என்று சொல்ல முடியாது நிறையவே இருக்கும்" என்று யாராவது சொன்னால் வேறு ஒரு வகையில் அதனைப் பட்டியலிட்டு விடலாம். அந்தப் பாடல்களை எடுத்த இயக்குநர்களைக் கொண்டு வரிசைப்படுத்தினால், ஒரு சில இயக்குநர்களின் படங்களில் வரும் பாடல்கள் மட்டுமே அப்படி அமைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

சமீபமாக அப்படிப் பார்த்த ஒரு பாடல். ஜானி படத்தில் "ஸெனோரீட்டா ஐ லவ் யூ" என்ற பாடல். மகேந்திரன் இந்தப் பாடலுக்கான காட்சி அமைப்பை ரஜினிகாந்த், தீபா - இருவரின் மோனோ ஆக்டிங்கில் படமாக்கியிருப்பார். இந்த உத்தியைத் தன்னுடைய பல படங்களில் செய்து பார்த்திருக்கிறார். குறிப்பாக உதிரிப்பூக்கள், ஜானி, மெட்டி போன்ற படங்களில்.

ரஜினிகாந்தின் நடிப்பைப் பற்றி பல்வேறு விதமான கருத்துகள் இருக்கின்றன. ஆனால், இந்தப் பாடலில் அனைவராலும் ரஜினியை ரசிக்க முடியும். இந்த மோனோ ஆக்டிங் விஷயத்தை மகேந்திரனுடைய பல படங்களில் பார்க்க முடிந்தாலும் இந்தப் பாடல் மிகவும் ரசிக்கும்படி அமைந்திருக்கும். காரணம், அது ஓர் இளம் ஜோடியின் எதிர்காலக் கனவுகள் குறித்து இருப்பதால் இருக்கலாம்.

நன்றி: http://rajinifans.com/

ஒரு ஃபுட் பால் வீரனைப் போல் கால்பந்தை உருட்டி விளையாடி ஓங்கி உதைக்கப் போகும்
தருணத்தில் உதைக்காமல் (தீபாவின் முகத்தில் வந்த பயத்தைப் பார்த்துவிட்டு) கால்பந்தைக் கையில் எடுத்து வேறு பக்கமாக வீசுவார். அழும் குழந்தையைச் சிரிக்க வைக்க குழந்தையைத் தூக்கி விளையாட்டுக் காட்டும் போது தன்னுடைய கோட்டின் மேல் குழந்தை உச்சா பண்ணிவிட தீபாவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு கைகளால் கோட்டைத் தட்டிக் கொள்வார். பூக்களை ரசித்துக் கொண்டு போகும்போதே சட்டென்று நின்று ஒரு பூவைப் பறித்து தீபாவின் தலையில் வைப்பார். இப்படி நிறைய காட்சிகள்.

ஆனால், ஒவ்வொன்றிலும் விசேஷம் அந்த மோனோஆக்டிங். பூப்பறிக்கும்போது பூக்கள் இருக்காது. உதைப்பதற்குக் கால்பந்து கிடையாது. குழந்தையும் இல்லை. இவையெல்லாம் இருப்பது போன்ற நடிப்பு அந்தப் பாடலைப் பார்க்கத் தூண்டும்.

இளையராஜாவின் இசையும், அசோக்குமாரின் ஒளிப்பதிவும், பாடலாக்கப்பட்ட விதமும் இன்னொரு முறை பார்க்கத் தூண்டும் என்பது நிச்சயம்.

இந்தப் பாடலை இங்கே கேட்கலாம்.

7 comments:

rajkumar said...

ஜானி- ரஜினியின் வித்தியாசமான நல்ல நடிப்பை வெளிப்படுத்திய படம்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்காட்சியின் அமைப்பும், இசையும் மிகவும் அருமை.

நன்றி.

அன்புடன்

ராஜ்குமார்

Ganesh Gopalasubramanian said...

நானும் இந்த பாடலைப் பல முறை ரசித்திருக்கிறேன் ஆனால் நீங்கள் ரசித்த அளவிற்கு இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். மேலும் ஒரு ரஜினி ரசிகர். ராம்கி கேட்டீங்களா...

Raja said...

நான் விரும்பி பார்க்கும் பாடல். அதிலும் முடி வெட்டுவது போல் வரும் இசை மற்றும் ரஜினியின் இயல்பான நடிப்பு. இளையராஜா கலக்கியிருப்பார்.

மஞ்சூர் ராசா said...

முத்து, கொஞ்ச நாளா இந்தப் பக்கம் வர முடியலெ. ஆனா இன்னிக்கி நீங்க மரத்தடியிலெ எழுதிய மடல் என்னெ இங்கெ வரவச்சிரிச்சி.
மகேந்திரன் அவர்களைக் காட்டிலும் வித்தியாசமானவர் என்பதில் சந்தேகம் இல்லை.

ப்ரியன் said...

உண்மை முத்து நானும் பலமுறை இந்தபாடலை ரசித்து 'பார்த்திருக்கிறேன்' ரஜினி இந்த பாடலில் மிக அழகாக இயல்பாக செய்திருப்பார் அதிலும் அந்த 'குழந்தை ஊச்சா போனப் பின் முக பாவனை மாற்றி குழந்தையை கொடுத்துவிட்டு கோட்டை துடைத்தெடுப்பதாய்' நடித்திருப்பாரே அது கிளாசிக்...

Anonymous said...

நல்ல பதிவு..
வாழ்த்துக்கள்..

nagoreismail said...

ஜானி படமே அற்புதமான படம் தான், நீங்கள் நல்ல ரசிகன், அருமையாக ரசிக்கிறீர்கள், இந்த படத்தில் ஒரு காட்சி விடாமல் அனைத்தும் எனக்கு பிடிக்கும், அதிலும் மிக முக்கியமாக ரஜினியிடம் சீதேவி கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? என்று கேக்கும் காட்சியில் ரஜினி சீதேவி நடிப்பு மிக அற்புதம் - நாகூர் இஸ்மாயில்