Wednesday, November 23, 2005

மறு வாசிப்பு

எப்போதோ படித்த கதைகளை மறுபடி படிக்கும்போது ஏற்படும் அனுபவம் மிகவும் அலாதியா
னது. சில கதைகளை மீண்டும் வாசிக்க வேண்டும் என்று விரும்பக்கூடியவர்கள் அதிகம் இருக்
கிறார்கள். எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காத கதைகள், அவை. அந்த வகையில் என்னுடைய புத்தக அடுக்கிலும் சில புத்தகங்கள் உண்டு.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் எடுத்துப் படிக்கவென்று நான் வைத்திருக்கும் புத்தகங்கள்
பெரும்பாலும் சிறுகதைகள். இந்தப் புத்தகங்களையெல்லாம் குறைந்தது ஒரு முறையாவது
படித்திருக்கிறேன். ஆனால், மீண்டும் மீண்டும் படிப்பதில் ஒரு சந்தோஷமிருக்கிறது. இந்தச் சந்தோஷம் என்பது எழுதிய நேர்த்தியைப் பார்த்து வியந்து போவதில் இருக்கும். அந்தக் கதையின் வார்த்தைப் பிரயோகங்களினால் இருக்கலாம். அந்தக் கதாபாத்திரங்களைக் கண்டு பிரமித்திருக்கலாம். சில கதைகளை வாசிக்கும் அனுபவத்துக்காக மட்டுமே படிக்கலாம். (குறிப்பாக வண்ணதாசன் கதைகள்) அப்படி வாசிப்பதை ஒரு பயிற்சியாகக் கொள்ளலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால், ஒரு முறை படித்ததற்கும் அடுத்த முறை அதே கதையை வாசிப்பதற்கும் இடையில் குறைந்த இடைவெளியாவது இருக்கும். அது ஒரு வாரமாகவோ அல்லது ஒரு மாதமாகவோ இருக்கும். அதற்கு மேலும் இருக்கலாம். இந்த இடைவெளிதான் அந்தக் கதைகளை மேலும் சுவாரசியமாக மாற்றுகின்றன என்று நினைக்கிறேன். அப்படிப் படிக்கக்கூடியவை பெரும்பாலும் சிறுகதைகளே என்பதற்கு நேரம் மட்டுமே காரணமல்ல. மிகவும் பிடித்துப் போன படைப்புகளே நம்மை அப்படி மீண்டும் மீண்டும் படிக்க வைக்கின்றன.

அப்படி அடிக்கடி வாசிக்கும் சிறுகதைகள் வண்ணநிலவனுடைய சில கதைகள். (எஸ்தர், காரை வீடு, விமோசனம், அவன் அவள் அவன், நட்சத்திரங்களுக்குக் கீழே, மெஹ்ருன்னிசா, யௌவன மயக்கம்) சா. கந்தசாமியின் சில கதைகள் (முத்துராஜா பிராது, நிறவேற்றுமை, தக்கையின் மீது நான்கு கண்கள்), வண்ணதாசனின் சில கதைகள் (ஞாபகம், தனுமை, போர்த்திக் கொள்ளுதல், அழுக்குப்படுகிற இடம், முழுக்கைச் சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும், நடேச கம்பர் மகனும் அகிலாண்டத்து அத்தானும், உயரப்பறத்தல், நடுகை, இன்னும் நிறைய கதைகள்). பாவண்ணனின் சில கதைகள் (ஆறு, ஜெயம்மா.) பா.ராகவனின் சில கதைகள் (மாயக்கயிறு, கத்தி முனையில் துளிவிஷம், நாயகி, குதிரைகளின் கதை). ஆர்.வெங்கடேஷின் சில கதைகள் (பால் அட்டை, ஒற்றைப் பனை, மாஸ்டர், 40 கிலோமீட்டர், காலிப்ளவர்).

அசோகமித்திரனின் பல கதைகள், தி.ஜானகிராமனின் பல கதைகள்.

எப்போதாவது நாவல்களை மறுபடியும் படிக்கத் தோன்றும். கிடைக்கக்கூடிய நேரத்தைப் பொ
ருத்து, சில சமயங்களில் பாதி மட்டுமே படித்துவிட்டு வைத்துவிடும் பழக்கமும் உண்டு. குறிப்பிட்ட அத்தியாயத்துக்குச் சென்று அதை மட்டும் படித்துப் பார்ப்பதும் உண்டு (ஒற்றன் நாவலில் வரும் மகா ஒற்றன் என்ற அத்தியாயத்தை மட்டும் அடிக்கடி படிக்கும் பாராவின் சூட்சுமம் இது). மறுவாசிப்பு என்பதெல்லாம் சிறுகதைகளும் நாவல்களும் மட்டும்தான். இது தவிர வேறு புத்தகங்கள் அடிக்கடி படிப்பதென்றால் ஏதேனும் நேர்காணல்களாக இருக்கும்.

இப்படி சிறுகதைகளையே படித்துக் கொண்டிருந்தால் மற்ற விஷயங்களை எல்லாம் எப்போது
படிப்பது, என்பது தற்சமயம் எழுந்த கேள்வி. வேறு விஷயங்களைப் படிக்க ஆரம்பித்தால் பதில் கிடைக்கலாம். நிறையப் படிக்க வேண்டும் புனைவுகளுக்கு அப்பாலும்.

மறுவாசிப்பு என்பதைப் பற்றி அசோகமித்திரன் ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.

"... என் எழுத்துகளை இரண்டாம் முறை படிப்பது அவசியமாகிவிடுகிறது. முதல் வாசிப்பில் பல தகவல்கள் கவனத்தில் இருந்து பிறழ்ந்து விடுகின்றன. பலவற்றுக்குச் சம்பந்தமே இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கதையைத் தெரிந்து கொண்டு இரண்டாம் முறை வாசிக்கும்போது, நிறைய விவரங்கள் தெளிவாகின்றன. ஆனால் நான் யாரையும் `இரண்டு முறை வாசியுங்கள்' என்று வற்புறுத்த முடியாது. முடிந்தால் வாசியுங்கள் என்றுதான் கூற முடியும்."

அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுதி - 1
கிழக்கு பதிப்பகம்

3 comments:

ஜெ. ராம்கி said...

Welcome back! :-)

பிச்சைப்பாத்திரம் said...

Muthuraman,

Nice post. Keep writing.

- Suresh Kannan

Anonymous said...

Cool blog, interesting information... Keep it UP » » »